மத்திய அரசுடன் சேர்ந்து புதுச்சேரியின் உரிமைகளை பறித்து தமிழகத்துடன் இணைக்க ஆளுநர் முயற்சிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
கிருமாம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்தியாவில் ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இலவச அரிசி கொடுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் மட்டும் அரிசி தர வேண்டாம் என ஆளுநர் தடுக்கிறார். மத்திய அரசுடன் சேர்ந்து ஆளுநர் புதுச்சேரியின் எல்லா உரிமைகளையும் பறித்து தமிழகத்துடன் இணைக்க முயற்சிக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் புதுச்சேரியில் எதிர்க்கட்சி செயல்படாமல், எதிரி கட்சியாக இருக்கிறது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் மவுனம் காக்கிறார்கள். எங்கள் மீதான குறைகளை நேரடியாக கேளுங்கள். அதை விடுத்து அரசின் திட்டங்களை முடக்குவது நியாயமற்றது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் தான் முடிக்கப்படும் என்பது சரித்திரமாக இருந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.