நேர்கணால்:- ஆர்.ராம்
ஐ.நா.மனிதஉரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் குற்றவியல் நீதிமன்றை நோக்கிய பயணத்திற்கான முதற்படியை அடைவதற்குரிய சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு நாளிதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூன்று அரசியல் கூட்டுக்கள் ஒன்றிணைந்து ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா.தீர்மானத்தினை கூட்டமைப்பு மட்டுமே “நாம் கோரிய விடயங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன” எனக் கூறி வரவேற்றிருக்கின்றது?
பதில்:- மூன்று தரப்புக்களும் ஒன்றிணைந்து அனுப்பிய கடிதத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயமானதுரூபவ் ஐ.நா. பொதுச்சபை அல்லதுரூபவ் செயலாளர் நாயகத்தின் மூலம் ஐ.நா.பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் நோக்கத்துக்கான முன்னேற்பாடாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து அவ்விடயம் வெளியே எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டடிருந்தது.
தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கடந்த மூன்று தீர்மானங்களில் காணப்பட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ‘கலப்பு பொறிமுறை’ என்ற விடயம் முழுமையாக வெளியில் விடப்பட்டுள்ளது. அத்துடன் பொறுப்புக் கூறல் விடயமானது முழுமையாக சர்வதேச பொறிமுறைக்குள்ளே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தின் பந்தியொன்றில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையால் பொறுப்புக்கூறல் விடயத்தினை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த முடியாது. இதனை முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அம்மையாரும் அண்மையில் நடைபெற்ற மெய்நிகர் மாநாட்டில் குறிப்பிட்டிருக்கின்றார்.
தற்போதைய தீர்மானத்தில், பொறுப்புக்கூறல் விடயம் தமது தளத்திலிருந்து வெளிவிடப்படுவதையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி நகர்த்துவதையும் பேரவையால் பயன்படுத்தக்கூடிய சொற்பிரயோகங்களுக்கு அமைவாக கூறப்பட்டுள்ளது.
அனுப்பிய, கடிதத்தில் இரண்டாவது பிரதானமான விடயமாக, சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரியிருந்தோம்.
அந்தக்கோரிக்கையும் முழுமையாக உள்ளீர்க்கப்பட்டுள்ளது. பூச்சிய வரைவில் சாட்சியங்களை பாதுகாப்பது தொடர்பான விடயம் காணப்படாது விட்டாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சாட்சியங்களை சேகரித்தல், பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகின்றன. அதற்கான நிபுணர்கள் குழு நியமிக்கப்படுவதும்ரூபவ் நிதி ஒதுக்கீடும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே நாம் கடிதம் மூலமாக கோரிய விடயங்களில் பிரதானமாக காணப்படும் இரண்டு விடயங்களும் தீர்மானத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இம்முறை உறுப்புரிமையைக் கொண்ட நாடுகள் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொள்ளும் போது எதிர்பார்த்ததையும் விட கூடுதல் வலுவுள்ளதாகவே தீர்மானம் காணப்படுகின்றது.
கேள்வி:- சுமந்திரன் என்ற தனிநபரே ஐ.நா.மனித உரிமை விவகாரங்களை கையாண்டிருக்கின்றார் என்ற கூறப்படுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- தனிநபராக கையாண்டேன் என்று கூறமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கு அமைவாக அந்த விடயத்தினை கையாண்டிருந்தேன். இந்தப் பொறுப்பானது கடந்த ஏழெட்டு வருடங்களாக எனக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
அதனடிப்படையில் கொழும்பில் நடைபெறும் சந்திப்புக்கள், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நேரடி, மற்றும் முறைசார அமர்வுகளில் பங்கேற்றிருக்கின்றேன். என்னுடன் சிவில் பிரதிநிதிகள், முஸ்லிம் சமுகத்தின் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருக்கின்றார்கள்.
நன்றி – வீரகேசரி