நேர்காணல்:- ஆர்.ராம்
படப்பிடிப்பு:- ஜோய் ஜெயக்குமார்
• ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் யேமனில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து யாரும் ஏன் பேசவில்லை? ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஏன் அந்த நாடுகளுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வரவில்லை?
• இலங்கை முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்துடன் ஒற்றுமையாக வாழ பழகிக்கொள்ள வேண்டுமென்பதோடு அனைத்து ஜனநாயக நாடுகளிலும், சிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
• பாதுகாப்பு, அனைத்து நாடுகளுக்கும் தேவையானதொரு விடயமாக இருக்கையில் சீனா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகள் குவாட்டினுள் உள்வாங்கப்படாமை ஏன்?
• உதவிகளை வழங்கும் சீனா எந்தவொரு நாட்டின் உள் விவகாரங்களிலும் தலையீடு செய்வதில்லை. இந்திய, இலங்கை உறவும் உள்ளக விவகாரங்களில் தலையீடு இல்லாமல் இருப்பதாக கருதுகின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இறுதியாக நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக் கூறல், மற்றும் நல்லிணக்கத்தினை முன்னேற்றுதல்’ எனும் தலைப்பிலான தீர்மானமானது நீதி, நெறிமுறைகளுக்கு அமைவானது அல்ல என்று இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது தெரிவித்தார்.
அவ்விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை விஜயம் வெற்றிகரமானதெனக் கருதுகின்றீர்களா? அப்படியாயின் அது எப்படி என்பதை கூறுவீர்களா?
பதில்:- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இலங்கை விஜயமானது மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்பதனை அவருக்கு வழங்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்பு, மற்றும் இலங்கை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோருடனான சந்திப்புக்கள் என்பனவற்றை இதற்கு ஆதரமாகக் கூற முடியும்.
அத்துடன், இரு பிரதமர்களின் முன்னிலையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சத்திடப்பட்டன. அதற்கு மேலதிகமாக, பாதுகாப்பு கடன் பொதியாக 50மில்லியன் அமெரிக்க டொலர்களும், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 52மில்லியன் பாகிஸ்தான் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவத்துறையில் நூறு மேலதிக புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதுமட்டுமன்றி, பிரதமர் இம்ரான் கான், இலங்கை ஜனதிபதி, பிரதமர் ஆகியோருடன் கட்டாயத் தகனம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறிய மறுதினமே இலங்கைத் தலைமைத்துவம் பாகிஸ்தானுடன் கொண்டிருந்த வலுவான நட்புறவை நிரூபித்தது.
மிக முக்கியமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆதரவினை வழங்கியதன் மூலம் பாகிஸ்தான் இலங்கையின் மீதான தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் பாரிய வெற்றியாகும்.
கேள்வி:- ஆனால் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டதல்லவா?
பதில்:- இலங்கை அரசாங்கமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாராளுமன்றத்தில் உரையாற்ற வேண்டும் என்பதற்கான முன்மொழிவைச் செய்திருந்தது. பின்னர், கொரோனா நிலைமையால் அதனை இரத்துச் செய்வதற்கு முடிவு செய்தனர்.
கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ‘இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், மற்றும் நல்லிணக்கத்தினை முன்னேற்றுதல்’ எனும் தலைப்பிலான தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான் வாக்களித்தமைக்கான காரணம் என்ன?
பதில்:- பாகிஸ்தானானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் நேரடியாக தலையிடுவதாக கருதியது. மேலும், பாகிஸ்தானும் இலங்கையும் பல தசாப்தங்களாக நீண்ட நட்புறவைக் கொண்டிருக்கின்றன. இரு நாடுகளும் எப்போதும் உறுதுணையாகவே நின்றிருக்கின்றன. எனவே, இந்தத் தடவை கூட பாகிஸ்தான் ஏன் இலங்கைக்கு சார்பாக நின்றது என்பதில் யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நன்றி – வீரகேசரி