மூத்த நடிகர்களில் முத்திரை பதித்து, நட்சத்திர அந்தஸ்துடன் உலாவரும் நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில், இளம் நடிகர் அதர்வாவும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
‘களவாணி’, ‘வாகை சூடவா’, ‘நையாண்டி’, ‘சண்டிவீரன்’, ‘களவாணி 2: ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ராஜ்கிரணும், அதர்வாவும் இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
இவர்களுடன் ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, ரவி காளே, ‘கடைக்குட்டி சிங்கம்’ புகழ் சத்துரு, பாலசரவணன், ஜி.எம். குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லோகநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். டெல்டா பகுதியில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெற்றிலை விவசாயத்தை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார்.
‘காவிரி நதி பாயும் பகுதியான திருவையாறு என்ற ஊரில் பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் வெற்றிலை பயிரிடும் விவசாயத்தை கதை களமாகக் கொண்டு, தாத்தாவிற்கும், பேரனுக்கும் இடையேயான உறவை வித்தியாசமான கோணங்களில் விவரிக்கும் திரைக்கதைதான் இந்த திரைப்படம்’ என்கிறார் இயக்குனர் ஏ சற்குணம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஓகஸ்ட் 4ஆம் திகதியன்று தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராஜ்கிரன் – அதர்வா முதன்முறையாக இணைவதால் இப்படத்திற்கு தொடக்கத்திலிருந்தே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.