Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 19 | பத்மநாபன் மகாலிங்கம்

12 minutes read

மாற்றம் ஒன்றே மனித வாழ்வில் இடையறாது நிகழ்வது. வாழ்வியல் முறை, தொழில்துறை, பண்பாடுகள், கலைகள், அணியும் உடை, உண்ணும் உணவு, வைக்கும் பெயர்கள் முதலிய யாவற்றிலும் கால ஓட்டத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. மாற்றங்கள் சில சமயங்களில் நல்லவையாகவும் வேறு சில சந்தர்ப்பங்களில் தீயவையாகவும் இருந்திருக்கின்றன. தமிழர்களின் பெயர் வைக்கும் முறைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. பெரும்பான்மையினர் சைவசமயத்தை கடைப்பிடித்ததனால் கணபதிப்பிள்ளை, வேல்முருகன், ஆறுமுகம், மீனாட்சி, விசாலாட்சி, சரசுவதி முதலிய பெயர்களை வைத்தார்கள். பின்னர் மூதாதையர் கடவுள்களின் பெயரை தான் வைத்தார்கள் என்று உணராமல் அவர்கள் வைத்த பெயர்களையும், அன்பின் நிமித்தம் தமக்கு பிடித்தவர்களின் பெயர்களையும் வைத்தார்கள்.

வெள்ளைக்கார துரைமார் வைத்த Mr.Black, Mr.White போன்ற பெயர்களை தமிழாக்கம் செய்து கறுப்பையா, வெள்ளைத்துரை முதலிய பெயர்களையும் வைத்தார்கள். இடையில் சில காலம் தனித்தமிழ் பெயர்களை விரும்பி வைத்து மகிழ்ந்தார்கள். இப்பொழுது எண்சாத்திரத்தில் நம்பிக்கை வைத்து நாவினால் உச்சரிக்க முடியாத பெயர்களை வைக்கின்றார்கள்.

கணபதிக்கு இருபத்திரண்டு வயதாகிவிட்டது. அவன் மீசாலை போகும் போதும் வரும் போதும் வழியில் வண்டிலை மறித்து மீனாட்சியுடன் கதைப்பதும், கதைக்காத நேரத்தில் தலையை மட்டும் ஆட்டி சிரித்து விட்டு செல்வதும் வழமையாகி விட்டது. கணபதி மறிக்க மறந்தாலும் எருதுகள் தாமாகவே மீனாட்சி வீட்டின் முன் நின்றுவிடும்.  கணபதி வண்டிலை விட்டு இறங்கியதில்லை, மீனாட்சியும் வேலியைத் தாண்டி வந்ததில்லை.

இப்போதெல்லாம் கணபதி பளையை தாண்டியதும் சீக்காய் (விசில்) அடிப்பான். மீனாட்சி அடி வளவில் நின்று செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு ஓடி வந்து வேலியை பிடித்தபடி நிற்பாள். கணபதியும் மீனாட்சியும் சங்கோசமின்றி கதைத்தாலும், பெரும்பாலும் பார்வைகளால் மட்டுமே அவர்கள் காதல் வளர்ந்தது.

கணபதிக்கு தங்கை மீதும் தம்பி மீதும் உள்ள பாசத்தையும், தந்தையார் மீது வைத்திருக்கும் பெரும் மதிப்புடன் கூடிய அன்பையும், தாயாரிடம் இருந்த  அளவில்லா அன்பையும் அவன் கதைகளில் இருந்து மீனாட்சி தெரிந்து கொண்டாள்.

மீனாட்சி, தனது தம்பியான கந்தையன் பிறந்த சில நாட்களில் தாயார் இறந்துவிட்டதையும், அதன் பின் தகப்பன், வேறு திருமணம் செய்யாது தாயாகவும் தகப்பனாகவும் தங்களிருவரையும் வளர்த்த கதையையும் கூறியிருந்தாள். கணபதி “எங்கள் விடயத்தை ஐயா விளங்கிக் கொள்ளுவார், அம்மாவுக்கு என்மீது சரியான அன்பு இருக்குது. ஆனால் அம்மா எதிலும் உறுதியானவா, அதனால் என்ன சொல்லுவாவோ என்று கொஞ்சம் யோசனையாக இருக்குது.” என்று கூறியிருந்தான். அதற்கு மீனாட்சி “உங்கடை ஐயாவோடை கதையுங்கோ. அவர் ஒரு வழி சொல்லுவார். வேறு ஆட்கள் சொல்லி அவர் அறியிறதை விட நீங்கள் நேரே சொல்லுறது தான் நல்லது” என்று கூறினாள்.

கணபதி வயல் செய்கையை தகப்பனுடன் சேர்ந்து வழமை போல செய்து வந்தான். தோழர்களுடன் வேட்டைக்கு போவதும் தொடர்ந்தது. இப்போதெல்லாம் செருக்கன் நண்பர்களும் கணபதியுடன் வேட்டைக்கு செல்கிறார்கள்.

பறங்கியர் தவறாது ஞாயிற்றுக் கிழமைகளில் தனது குதிரையில் சவாரி செய்து வருவார். இடைக்கிடை அவரும் கணபதியுடன் வேட்டைக்கு செல்வார். அப்படி செல்லும் போது அவரும் கணபதியின் போக்கில் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டார்.

“கணபதி என்ன விசயம், முந்தின உசாரைக் காணவில்லை” என்று கணபதியிடம் கேட்டார். தோழர்கள் மீனாட்சியின் கதையையும் கணபதி தாய், தகப்பனிட்ட சொல்ல பயப்படுவதையும் கூறிவிட்டார்கள். “Oh love”  என்று விசில் அடித்து சிரித்த பறங்கியர்

“கணபதி உன்ரை ஐயா ஒரு நல்ல மனிதர். அவருடன் நான் கதைத்திருக்கிறேன், அம்மா ஒரு புன் சிரிப்புடன் போய்விடுவா. நீ மினக்கெடாமல் ஐயாவிடம் சொல்லு. மற்றாக்கள் சொல்ல முன் நீ சொல்லிவிடு” என்று கூறினார்.

வண்டிலில் மீசாலை செல்வதும், வருவதும் தொடர்ந்தது. தோழர்கள் கணபதியின் காதலைப் பற்றி ஊரில் ஒருவரிடமும் சொல்லவில்லை. அவன் அவர்களின் நன்மை தீமைகளில் எல்லாம் முன்னுக்கு ஓடி வந்து செய்பவன். இப்போதும் அவனது ஆலோசனையின் படி தான் கூரை மரங்களை மாற்றி, பனை மரம் போட்டு, பனையோலைக்குப் பதிலாக எல்லோரும் கிடுகுகளால் வேய்கிறார்கள்.

நெல்லையும் வண்டில்களில் அதிகம் ஏற்றமுடியாது. நெல்லை அடிக்கடி கொண்டு போய் விற்றுவிட்டு, கிடுகு வாங்கி வருவது வசதியாக போய் விட்டது. போகும் போதும் வரும் போதும் கணபதி சீக்காய் அடிப்பதையும் மீனாட்சி ஓடி வந்து வேலியில் நிற்பதையும் கண்டு அவர்களுக்கு மகிழ்ச்சி தான். கணபதி மீனாட்சியை பார்த்து வரும்வரை அவனுக்காக காத்திருப்பார்கள். கணபதியும் அவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதில்லை.

ஊரில் கணபதி மீனாட்சி பற்றி அரசல்புரசலாக கதைக்க தொடங்கி விட்டார்கள். கணபதி இனியும் தாமதிப்பது சரியில்லை என்று புரிந்து கொண்டான். ஒருநாள் பின்னேரம் காட்டிலுள்ள ‘காலையில்’ மாடுகளை அடைக்கும் போது கணபதி ஆறுமுகத்தாரின் அருகே சென்று தயங்கி நின்றான். அவன் ஏதோ சொல்ல வருகிறான் என்பது ஆறுமுகத்தாருக்கு விளங்கியது.  அவரும் அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்தேயிருந்தார்.

“என்ன கணபதி என்னிடம் கதைக்கிறதுக்கு உனக்கு என்ன பயம். பயப்படாமல் சொல்லு.” என்றார்.

கணபதி “இல்லை ஐயா, உங்களுக்கு பளையிலிருக்கும் முருகேசரைத் தெரியும் தானே. அவற்றை மகள் மீனாட்சியுடன் கதைக்கிறனான். எனக்கு உங்கடையும் அம்மாவினதும் சம்மதம் தான் முக்கியம்” என்று மென்று விழுங்கினான்.

ஆறுமுகத்தார் கணபதியின் நிலையை புரிந்து கொண்டார். அவன் மீதுள்ள பாசத்தினால் அவனது தயக்கத்தைக் கண்டு பரிவுடன் “கணபதி, ஒரு பெண்ணிடம் கதைத்து விட்டால் பிறகு அவளை எக்காலத்திலும் எவருக்காகவும் விட்டுவிடக் கூடாது. எனக்கு உன்ரை சந்தோசம் தான் முக்கியம். அம்மா தான் என்ன சொல்வாவோ தெரியாது. விசாலாட்சி உன் மேல் உயிரையே வைத்திருக்கிறா.  உனக்கு தம்பையரின் உறவில் உள்ள முறைப் பெண்களில் ஒருத்தியைச் செய்ய வேண்டும் என்று என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறா. ஆனால் அவ ஒருநாளும் உன்ரை விருப்பத்திற்கு மாறாக நடக்கமாட்டா. கொஞ்சம் பொறு நான் விசாலாட்சியிடம் கதைக்கிறேன்” என்றார்.

இதற்கிடையில் கணபதிக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வுகளும் பெரிய பரந்தனில் நடந்தன. கணபதியின் ஒன்றுவிட்ட சகோதரியான பொன்னாத்தைக்கு திருமணம் நிச்சயமானது.

மாப்பிளை மீசாலையை சேர்ந்தவர். கணபதியும் தோழர்களும் பொன்னாத்தையின் வீட்டு கூரைக்கு பனை மரத்தை போடுவித்து, பளையிலிருந்து கிடுகு வாங்கி வந்து வேய்ந்தார்கள்.  வளவின் பதிவான பகுதிகளுக்கு வண்டிலில் மண் ஏற்றி வந்து பறித்து, பரவி விட்டார்கள். பனை ஓலை வெட்டி, ஆடுகள் கூட நுழைய முடியாது வேலியை அடைத்தார்கள்.

நல்ல நாள் பார்க்கப்பட்டது. மாப்பிள்ளை முதல் நாளே வந்து தியாகர்வயலில் குடும்பத்துடன் தங்கினார். அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்தில் மாப்பிள்ளை மஞ்சள் கயிற்றை பொன்னாத்தை கழுத்தில் கட்டினார். பெண்கள் விசாலாட்சியின் மேற்பார்வையில் சமைத்திருந்தார்கள். ஒரு தலை வாழை இலையில் அறுசுவை உணவை படைத்து முதலில் மாப்பிள்ளையையும் பின் பொன்னாத்தையையும் சாப்பிட வைத்தார்கள். நாட்சோறு கொடுத்தல் இனிது நிறைவேறியது.

மற்றவர்கள் பந்தியிலிருந்து சாப்பிட்டு விட்டு விடை பெற்றார்கள். ஒரு வருட முடிவில் பொன்னாத்தை ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுத்தாள். பொன்னாத்தையும் கணவரும் கணபதியின் மீதான அன்பினால் தங்கள் மகனுக்கும் கணபதிப்பிள்ளை என்றே பெயரிட்டார்கள்.

இப்போது பெரியபரந்தனில் மூன்று கணபதிகள் வந்து விட்டனர். அதனால் முத்தரின் மகனை முத்தர்கணபதி என்றும், பொன்னாத்தையின் மகனை பொன்னாத்தைகணபதி என்றும் அழைக்கத் தொடங்கினார்கள்.  செருக்கனில் பிறந்த ஒரு ஆண் பிள்ளைக்கும் கணபதிப்பிள்ளை என்று பெயரிட்டதனால் அவனை செருக்கன்கணபதி என்று அழைத்தார்கள்.

முத்தர்கணபதி தமிழ், சைவம், வாழ்வதற்கு தேவையான கணிதம் என்பவற்றை கற்றிருந்தான். சமஸ்கிருத சுலோகங்கள் சிலவற்றையும் அறிந்திருந்தான். நாயன்மார்கள் நால்வரினதும் வரலாற்றையும் தேவாரங்கள், திருவாசகங்களையும் கற்றிருந்தான். அவற்றை பண்ணோடு பாடுவான். தொல்காப்பியம், நிகண்டு, அகநானூறு, புறநானூறு, திருக்குறள், இராமாயணம், மகாபாரதம், நாலடியார், நல்வழி என்று என்னென்னவோ கற்றிருந்தான்.

ஆங்கில பாடசாலை செல்லாத காரணத்தால் English (ஆங்கிலம்) கற்கவில்லை. கணபதி, முத்தர்கணபதி கற்ற கல்வியை ஊருக்கு பயன்படுத்த எண்ணி, ஆறுமுகத்தாரும் முத்தரும் இருக்கும் போது ஒரு நாள்   “எங்கடை ஆட்கள் பலர் படிக்கவில்லை. வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வருபவர்களை கொஞ்சம் முன்னுக்கு வரப்பண்ணி முத்தர்கணபதியைக் கொண்டு இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து சில கதைகளையும் நால்வர் வரலாற்றையும் கூற வைக்கலாம்.

தேவார, திருவாசகங்களை பண்ணோடு பாட பழக்க சொல்லலாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என்று கேட்டான். படித்த பிள்ளை தனியே கமவேலையை மட்டும் செய்யாமல் இப்படி ஏதாவது செய்தால் அவன் படித்த படிப்பும் பிரயோசனப்படும் என்று எண்ணிய அவர்கள் சம்மதித்தார்கள். முத்தர்கணபதி வெள்ளிக் கிழமை எல்லாருக்கும் கதை சொல்வதுடன், சனிக்கிழமை சிறுவர்களுக்கு அன்றாட வாழ்வில் பயன்படும் அளவிற்கு கணக்கையும் தமிழையும் கற்பித்தான்.

மீசாலைக்கு செல்ல வேண்டி வந்தபோது கணபதி மீனாட்சியிடம் “நான் ஐயாவிடம் எங்கள் விசயத்தை சொல்லி விட்டேன். அதற்கு ஐயா ‘அவசரப்படாமல் இரு. நான் அம்மாவிடம் ஆறுதலாக கதைக்கிறேன்’ என்று சொன்னவர்” என்றான். உடனே மீனாட்சி கையை கூப்பி, கண்களை மூடி “காளியாச்சி, நீ தான் எங்களுக்கு வழிகாட்ட வேணும்” என்று வேண்டினாள்.

கணபதி சென்றவுடன் தனிமையில் இருந்த விசாலாட்சியிடம் ஆறுமுகத்தார் “விசாலாட்சி, உன்னுடன் ஒரு விசயம் கதைக்க வேணும், பதற்றப்படாமல் கேள். எங்கடை கணபதி பளையில் ஒரு பெண்பிள்ளையுடன் கதைக்கிறான். ‘நீ அவனை படிப்பை விட்டுவிட்டு வா, பெரிய பரந்தனுக்கு போவோம்’ என்று சொன்னவுடன்  மறுபேச்சில்லாமல் வந்தவன். இன்று வரை என் பேச்சையும் உன் பேச்சையும் தட்டி நடக்காத பிள்ளை. பெரிய பரந்தனுக்கு அதை செய்ய வேண்டும், தங்கைக்கும் தம்பிக்கும் இதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவன், இப்போது தான் முதல் முதலாக தனக்கென ஒன்றுக்கு ஆசைப்பட்டிருக்கிறான். அதுவும் என்னிடம் ‘உங்களுக்கும் அம்மாவுக்கும் சம்மதமில்லாத ஒன்றை நான் செய்ய மாட்டேன்’ என்று அவன் தயங்கி தயங்கி சொல்ல எனக்கு கண்கள் கலங்கி விட்டது. நீ என்ன சொல்லுறாய்?” என்றார்.

கணபதி ஒரு பெண் பிள்ளையிடம் கதைக்கிறான் என்று கணவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விசாலாட்சி, என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போனாள்.

ஆறுமுகத்தார் தொடர்ந்து “விசாலாட்சி, என்னை கலியாணம் கட்ட சொல்லி உன்னை எல்லோரும் வற்புறுத்த, உன்னை கலியாணம் செய்ய சொல்லி முத்தர் என்னை கேட்க ஒரு வித தயக்கத்துடன், தியாகர்வயலை அழியவிடக்கூடாது, கணபதியை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் இருவரும் சம்மதித்தோம். தம்பையர் என்ரை உயிர் சினேகிதரென்பதால், உன்னுடன் மிகவும் மதிப்பாக பழகிய எனக்கு, கலியாணம் முடிந்த பிறகும் சில நாட்களுக்கு உன்னோடு பழக மனம் இடம் தரவில்லை. தம்பையரை கலியாணம் செய்து, வாழ்ந்து அவரின் நல்ல குணங்களால், அவர் மீது உயிரை வைத்திருந்த நீயும் என்னை புருசனாக ஏற்க தயங்கினாய். நீ எனது நல்லது கெட்டதில் பங்கு பற்றி, நாங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து சில வருடங்கள் வாழ்ந்த பிறகு தான் எங்களால் ஒன்று சேர முடிந்தது.”என்றார்.

ஆறுமுகத்தார் மேலும் “விசாலாட்சி, எங்களுக்கு பிடிக்கேல்லை என்றால் கணபதி, நாங்கள் காட்டும் பெண்ணை கலியாணம் செய்வான். அவன் அந்த பெண்ணுடன் புருசன் பெண்சாதியாக நடக்க எவ்வளவு காலம் ஆகுமோ? தெரியாது. கணபதி மனம் மாறும் மட்டும் வருபவள் பொறுத்து இருப்பாளா? அடுத்தது பளையால் போய் வரும் போது ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டேனே என்று ஒவ்வொரு முறையும் செத்து செத்து பிழைப்பான்.” என்று கூறினார்.

“ஐயோ என்ரை பிள்ளை” என்று சொல்லி சத்தம் போட்டு அழுதபடி விசாலாட்சி ,ஆறுமுகத்தாரின் கையை பிடித்துக் கொண்டாள். தகப்பன்ரை கையை தாய் பிடித்துக் கொண்டு அழ, மீனாட்சி “அம்மா” என்று ஓடி வந்து தாயை கட்டிப் பிடித்தாள். பேரம்பலம் தடுமாறி நடந்து வர ஆறுமுகத்தார் அவனை தூக்கி கொண்டார். பிள்ளைகளை பார்த்ததும் விசாலாட்சி கண்களை துடைத்துக் கொண்டாள்.

அப்போது அவர்களுக்கு தூரத்தில் ஆரோ சத்தமாக கதைத்த படி வரும் சத்தம் கேட்டது. விசாலாட்சியின் தம்பிமாரும் மற்ற உறவினர்களும் கூட்டமாக வருவதை இருவரும் கண்டனர். வந்தவர்கள் ஆறுமுகத்தாரை கண்டதும் திகைத்துப்போய் நின்றார்கள். அவர்கள் விசாலாட்சியிடம் தான் கதைக்க வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த ஆறுமுகத்தார் பேரம்பலத்தை தூக்கிய படி மீனாட்சியை மற்ற கையால் பிடித்துக் கொண்டு பின்பக்கம் சென்றுவிட்டார்.

கூட்டமாக இவர்கள் வந்ததை கண்டு   ஓடி வந்த முத்தரை ஆறுமுகத்தார் தன்னிடம் வரும் படி கையை காட்டினார். வந்தவர்கள், “அக்கா, எங்கள் குடும்பத்தில் ஒருவரும் புறத்தியில் செய்ததில்லை. கணபதி என்ன புதுசாக தொடங்குறான், இதை விடக்கூடாது” என்றார்கள்.

ஒருவர் மாறி ஒருவர் சத்தமாக கதைத்தார்கள். முத்தர் அவர்களுக்கு பதில் சொல்ல திரும்பினார். ஆறுமுகத்தார் அவரது கையை பிடித்து நிறுத்தி “முத்தர் அம்மான், பொறுங்கோ. விசாலாட்சி என்ன சொல்லுறா என்று பார்ப்பம்.” என்றார். அப்போது விசாலாட்சி எல்லாரையும் கையை காட்டி மறித்தாள். அவளது குரல் சாந்தமாக, அதே வேளை உறுதியாக ஒலித்தது.

“தம்பிமார், நீங்கள் எங்கடை குடும்பத்தில் இருக்கிற கரிசனையாலும் கணபதியில் உள்ள உண்மையான அன்பாலும் தான் கதைக்கிறீங்கள் என்று எனக்கு விளங்குது. ஆனால் இவ்வளவு நாளும் உங்கடை வீடுகளில் ஏராளம் கலியாணங்கள் நடந்திருக்கு. ஒன்றுக்கும் எங்கள் யோசனையை நீங்கள் வந்து கேட்டதில்லை. ஆறுமுகத்தாரும் நானும் ஒரு நாளும் தலையிட விரும்பினதும் இல்லை.  நீங்கள் கலியாண வீடு என்று சொன்னதும் ஆறுமுகத்தாரும் கணபதியும் ஓடி வந்து, முறிந்து முறிந்து எல்லா வேலையையும் சந்தோசமாக செய்தார்கள். இப்ப நீங்கள், நாங்கள் கேட்காமலே யோசனை சொல்ல வந்து விட்டீர்கள். இஞ்சை பாருங்கோ, கணபதியின்ரை கலியாணத்தைப் பற்றி நீங்கள் கதைக்கேலாது. ஆறுமுகத்தாரும் நானும் கணபதியும் தான் அதைப் பற்றி தீர்மானிக்க வேண்டும். இப்ப நீங்கள் எல்லாரும் போட்டு வங்கோ. இந்த கதையை இதோடை விடுவம்.” என்றாள்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More