Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 16 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 16 | பத்மநாபன் மகாலிங்கம்

13 minutes read

“மாடு” என்றால் பசுக்கள், எருதுகள், எருமைகள் மட்டுமல்ல, “மாடு” என்றால் செல்வம் என்ற கருத்தும் உண்டு. ஆபிரிக்கா தேசத்தில் கூடுதலான மாடுகள் வைத்திருப்போரையே தமது பெண்களுக்கு மாப்பிள்ளையாக தெரிவு செய்தார்கள். தம்மால் முடிந்த எண்ணிக்கையான மாடுகளை பெண்ணின் தந்தையிடம் கொடுத்து, பெண்ணை திருமணம் செய்து கொண்டார்கள்.

பெரிய பரந்தன் மக்கள் தமக்கு கூடுதலான விளைச்சல் வந்த போது மாடுகளை வாங்கினார்கள். எருதுகள், பசுக்கள், எருமைகளையே செல்வமாக கருதினார்கள். பொன், தங்கம், நகைகள் பற்றியெல்லாம் சிந்தித்ததில்லை. கிடைத்ததை வைத்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் வாழ்ந்தார்கள்.

தங்களுக்குள் போட்டி, பொறாமை இன்றி மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். நிறைய குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள். தம்மால் இயன்ற அளவிற்கு பிள்ளைகளுக்கு கல்வி புகட்டினார்கள், சிறுவயதிலேயே வயல் வேலைகளை பழக்கினார்கள், ஆடுகள், மாடுகள், எருமைகளை நேசித்து வளர்க்க பழக்கினார்கள், கடவுள் பக்தியுடன், கடவுளுக்கு பயந்து ஒழுக்கமாக வாழப் பழக்கினார்கள்.  

பங்குனி மாதம் முதற்கிழமை பெரிய பரந்தன் மக்கள், தமது குல தெய்வமான காளிக்கு பொங்கல் செய்வதற்காக முத்தர், ஆறுமுகத்தார் தலைமையில் பிள்ளையார் கோவில் முன்றலில் கூடினார்கள். கடவுள் பக்தியில் ஆண்களை விட பெண்களே தீவிரமாக இருப்பார்கள். கூட்டத்திற்கு பெண்களும் வந்திருந்தார்கள். அடுத்த வெள்ளிக்கிழமை பொங்குவதென்று தீர்மானித்து ‘வழந்துக்காரரிடம்’ கூறினார்கள்.

பங்குனி மாதம் இரண்டாம் வியாழக்கிழமை குழந்தையன் மோட்டை பிள்ளையார் கோவிலில், ஒரு பெரிய பானை வைத்து பொது ‘வழந்தாக’ பொங்குவதென்றும், வெள்ளிக்கிழமை பிள்ளையார், காளி, வீரபத்திரன், வைரவர் முதலிய தெய்வங்களுக்கு காளி கோவிலில் ஒவ்வொரு  ‘வழந்துக்காரனும்’ தனித்தனி ‘வழந்து’ வைத்து  பொங்குவதென்றும், நேர்த்தி வைத்தவர்கள் பக்கப் பானை வைத்து பொங்குவதென்றும் முடிவு செய்தார்கள். (வழந்து—>பானை | பக்கப்பானை—> சற்று சிறிய பானை | வழந்துக்காரன்—>தொடர்ந்து பொங்குபவன் | பக்கப் பானை வைப்போர் —> நேர்த்தி வைப்பதை பொறுத்து ஆண்டுக்கு ஆண்டு மாறுவார்கள்)

அடுத்த புதன் கிழமை அதிகாலை ஐந்து பண்ட வண்டில்கள் மீசாலை செல்வதென்றும், வியாழக்கிழமை பண்ட வண்டில்கள் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முறை இரண்டு சோடி மூப்பனார்களை அழைக்க வேண்டும் என்றும், கடவுள்களுக்கு சாத்துப்படி சாத்துபவர்களை கூப்பிட வேண்டும் என்றும் பெண்கள் கோரினார்கள். எல்லோரும் சம்மதித்தார்கள். (சாத்துப்படி—>கல்லாலும் சூலங்களாலுமான தெய்வங்களை மலர்கள், செயற்கை மலர்கள், வண்ண சேலைகள் கொண்டு அலங்கரிப்பது) (மூப்பனார் —> பறை மேளம் அடிப்பவர் |ஒரு சோடி—> ஒரு பெரிய மேளமும் தொந்தொடி அடிக்கும் சிறிய மேளமும் |பண்டம்—> பொங்கலுக்குரிய பொருட்கள்) பண்டம் சேகரிப்பவர்களை விட  மேலும் இருவர் சென்று மூப்பன் மாரையும் சாத்துப்படி சாத்துபவனையும் அழைத்து வருவதென்று தீர்மானித்தார்கள்.

முத்தர் ஒரு வண்டிலில் சாவகச்சேரி சென்று கற்பூரம், சாம்பிராணி, வெற்றிலை, பாக்கு, மண்பானைகள் (பெரிதும் சிறிதும்) வாங்கி வருவதென்று முடிவு செய்தார்கள்.

புதன் கிழமை காலை கணபதியின் வண்டில் முதலில் வந்து நின்றது. ஏனைய வண்டில்கள் பின்னுக்கு வந்து வரிசையாக நின்றன. வண்டில் ஓட்டிகள் எல்லோரும் தலைப்பா கட்டியிருந்தார்கள். முத்தர் ஒரு தட்டில் கற்பூரத்தை கொழுத்தி பிள்ளையாருக்கு காட்டினார். பின் வண்டில்கள் யாவற்றிற்கும் காட்டி, பண்டம் சேகரிக்க செல்வோருக்கு திருநீறு பூசி சந்தன பொட்டும் வைத்து விட்டார். பின்னர் எருதுகளுக்கும் திருநீறு பூசி சந்தன பொட்டும் இட்டு விட்டார்.

முத்தரும் ஆறுமுகத்தாரும் கணபதியின் வண்டிலில் ஏற, ஏனையவர்கள் மற்ற வண்டில்களில் ஏறினார்கள். அணிவகுத்து சென்ற வண்டில்களை பெரிய பரந்தன் மக்கள் கை காட்டி வழியனுப்பி வைத்தார்கள்.

வியாழன், வெள்ளி பொங்கல் முடியும் மட்டும் முத்தரும் ஆறுமுகத்தாரும் உணவு சாப்பிட மாட்டார்கள். இளநீர், பழரசம், தேனீர் மட்டும் குடிப்பார்கள். வண்டில்கள் மீசாலை நோக்கி ஓடின.

வண்டில்கள் பளை சந்தையை தாண்டி, கணபதி முன்னர் எருதுகளை ஆற விட்ட மரத்தடியைக் கண்டதும் கணபதியின் மனதை அறிந்தவை போல எருதுகள் மெதுவாக சென்றன. கணபதியின் கண்கள் மீனாட்சியை தேடின. வண்டில்களைக் கண்டதும் மீனாட்சி ஓடி வந்து வேலி மறைவில் நின்று பார்த்தாள். கணபதியின் கண்கள் தன்னை தேடுவதைக் கண்டு உவகை கொண்டாள். கணபதிக்கு மேலும் தாமதிக்க பயம். வண்டிலில் ஆறுமுகத்தார் மட்டுமில்லை, முத்தரும் இருந்தார். வேகமாக எருதுகளை ஓட விட்டான். மீனாட்சி அவர்கள் தனது வீட்டைக் கடந்து போன பின் வெளியே வந்து, வாசலில் நின்று வண்டில்கள் மறையும் மட்டும் பார்த்துக் கொண்டு நின்றாள்.

மீசாலை, கச்சாய் எங்கும் பண்ட வண்டில்கள் போயின. காளியின் பக்தர்கள் தேங்காய், இளநீர், மாம்பழம், பலாப்பழம், வாழைக்குலை என்பவற்றை கொண்டு வந்து கொடுத்தார்கள். தேங்காய்களையும் இளநீர்களையும் ஒரு வண்டிலிலும், மாம்பழங்களை ஒரு வண்டிலிலும், பலாப்பழம், வாழைக்குலை என்பவற்றை மூன்றாவது வண்டிலிலும் ஏற்றினார்கள். நான்காவது வண்டில் மூப்பனார்களையும் மேளங்களையும் ஏற்றுவதற்கு மட்டுவிலுக்கு சென்றது. ஐந்தாவது வண்டிலில் முத்தர் ஏறி சாவகச்சேரி நோக்கி சென்றார். 

ஒருவர் சாத்துப்படி சாத்துபவனுடன் ஒரு வண்டில் பிடித்து, சாத்துப்படிக்கு தேவையான பொருட்களை ஏற்றி கொண்டு கச்சாய் துறைக்கு சென்று, ஒரு தோணியில் பொருட்களுடன் ஏறி சுட்டதீவிற்கு சென்றார்.

அங்கு வந்து காத்திருந்த வண்டிலில் ஏறி அன்றே பெரிய பரந்தனை அடைந்தனர். சாத்துப்படிக்காரன் உடனே தனது வேலைகளை ஆரம்பித்து விட்டான். ஆறுமுகத்தாரும் கணபதியும் அன்று இரவு தங்களது வீட்டில் தங்கினார்கள்.

மறுநாள் காலை கணபதியும் ஆறுமுகத்தாரும் மீசாலை சந்திக்கு சென்று காத்திருந்தார்கள். மற்றைய வண்டில்கள் ஒவ்வொன்றாக வந்தன. மட்டுவில் சென்ற வண்டிலில் நான்கு மூப்பனார்களும் தமது மேளங்களுடன் வந்து சேர்ந்தனர். கடைசியாக முத்தர் சாவகச்சேரியில் வாங்கிய பண்டங்களுடன் சின்னகணபதியையும் ஏற்றி வந்தார்.

வண்டில்கள் ஐந்தும் பெரிய பரந்தனை நோக்கி ஓடின. பளையை அண்மித்த பொழுது இவர்கள் தலைப்பா கட்டி சந்தன பொட்டு வைத்து, மீசாலை செல்வதை அவதானித்திருந்த முருகேசர் தனது வளவு வாசலில் இரண்டு இளநீர் குலைகளுடன் காத்திருந்தார்.

அவற்றை தேங்காய்களின் மேல் ஏற்றிய கணபதி தனது ஐயாவை முருகேசருக்கும், முருகேசரை தனது தகப்பனுக்கும் அறிமுகப்படுத்தினான். மீனாட்சியும் கந்தையனும் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். மீனாட்சியின் பெரிய கண்களை கண்டு ஒரு கணம் தடுமாறிய கணபதி, உடனே வேறுபக்கம் திரும்பி வண்டிலில் ஏறி பெரிய பரந்தனை நோக்கி ஓட விட்டான்.

பிள்ளையார் கோவிலுக்கு அருகே பூவரசம் மரங்கள், புளியமரம், வாகை மரங்களால் சூழப்பட்ட ஒரு வெளியான காணி பண்ட மரவடியாக தொடர்ந்து இருந்து வந்தது. (பண்டங்கள் இறக்கி வைப்பதற்காக உள்ள இடம் ‘பண்டமரவடி’ என்று அழைக்கப்பட்டது).

ஊர்மக்கள் அந்த இடத்தை துப்பரவாக்கி, இரண்டு பந்தல்கள் போட்டிருந்தார்கள். ஒரு பந்தல் பண்டம் இறக்கி வைப்பதற்கு, மற்றது சமைப்பதற்கு. பெரிய பரந்தன் மக்கள் எல்லோருக்கும் வியாழன் காலை தொடங்கி, வெள்ளி மத்தியானம் வரை பண்டமரவடியில் தான் சாப்பாடு. ஆண்கள் ஆடு, மாடுகளை அவிழ்த்து கட்டி ஒழுங்குபடுத்தி விட்டு வந்தார்கள்.

பெண்கள் அதிகாலையில் குளித்து விட்டு பண்ட மரவடியில் வந்து சமையலை ஆரம்பித்து விட்டார்கள். காலை வேளைக்கு கஞ்சி, மத்தியானத்திற்கு பல மரக்கறிகளுடன் சாப்பாடு சமைத்தார்கள். தேவையான பாத்திரங்களையும் அரிசி, மரக்கறி, உப்பு, தூள் முதலியவற்றை தமது வீடுகளிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். பண்ட வண்டில்கள் வரும்போது அவர்களுக்கான மத்தியான உணவு காத்திருந்தது. முத்தருக்கும், ஆறுமுகத்தாருக்கும் தேனீர் கொதித்துக் கொண்டிருந்தது.

இரண்டு நாட்களும் பண்டமரவடியில் முதல் பந்தியில் சிறுவர்களும், அடுத்து ஆண்களும், கடைசியாக பெண்களும் கதைத்து பேசி ஒன்றாக இருந்து சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.

முத்தரும் ஆறுமுகத்தாரும் பண்டம் தூக்கும் இளைஞர்களும் மீண்டும் ஒரு முறை கொல்லனாற்றில் குளித்துவிட்டு வந்தனர். பண்டங்களுக்கு முன்னே நின்று ஆறுமுகத்தார் மணியடிக்க முத்தர் தீபம் காட்டினார். பின்னர் முத்தர் பண்டங்களை ஒவ்வொன்றாக தூக்கி இளைஞர்களின் தோள்களில் வைத்தார். பெரிய பானையை தூக்கி ஆறுமுகத்தார் தோளில் வைத்தார். முத்தர் மணியை அடித்துக் கொண்டே முன் செல்ல மூப்பன்மார் மேளம் அடித்தபடி அடுத்துவர, பிள்ளையாரின் பொங்கலுக்கு தேவையான பண்டங்களுடன் ஏனையவர்கள் பின் தொடர்ந்தனர்.

சில பெண்கள் மட்டும் காளிக்கான பண்டங்களுக்கு காவல் இருந்தார்கள். முன்னே சென்ற முத்தர் பிள்ளையாருக்கு தீபங்களையும் கற்பூரத்தையும் ஏற்றினர். மூப்பனார்கள் மேளம் அடித்துக் கொண்டே இருந்தார்கள். முத்தர் பானையை இறக்கி, ஏற்கனவே தீ மூட்டப்பட்டிருந்த அடுப்பை மூன்று முறை சுற்றிவிட்டு வழந்தை அடுப்பில் வைத்தார். உடனே ஆறுமுகத்தார் வழந்தினுள் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேலே சிறிதளவு பாலை ஊற்றினார். முத்தர் ஒரு சிறங்கை அரிசி எடுத்து அடுப்பை மூன்ற முறை சுற்றி பானையில் இட்டு விட்டு, பின் மிகுதி அரிசியையும் பானையினுள் போட்டார்.

இளைஞர்கள் தமது பண்டங்களை இறக்கி வைத்துவிட்டு கோவில் வேலைகளை பார்த்தனர். பெண்கள் ஒரு பக்கத்தில் அடுப்பை மூட்டி, பண்டமரவடியில் அரைத்து எடுத்து வந்த உழுந்தில் வடை சுட்டு, மோதகமும் அவித்தனர்.

பொங்கல் முடிய முத்தரும் ஆறுமுகத்தாரும் வேறு சில ஆண்களுடன் காளி கோவிலுக்கு ‘சுருள்’ போட சென்றனர். ‘சுருள் போடுதல்’ என்பது காளி கோவிலில் விளக்கு வைத்தல் ஆகும். விளக்கு வைக்கும் போது முத்தர் கலை வந்து ஆடினார்.

அந்த வருட பொங்கல் எவ்வித குறையுமின்றி நடைபெற காளியின் அனுமதி கிடைத்தது. சுருள் முடிந்து வந்தபின்னர் இளைஞர்கள் பொங்கல், வடை, மோதகம், வாழைப்பழம், பலாப்பழ துண்டுகள், வெற்றிலை, பாக்குகளை படைத்தனர். தீபங்கள் மீண்டும் ஏற்றப்பட்டன. கற்பூரங்கள் கொளுத்தப்பட்டன. முத்தர் பிள்ளையாருக்கும் படையலுக்கும் தீபம் ஏற்றி, கற்பூரம் காட்டி, பூக்களால் பிள்ளையாருக்கு பூசை செய்தார்.

சின்ன கணபதி தேவாரங்களை பண்ணோடு பாடினான். பின்னர் கோவிலின் முன்வாசலிலே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட இளநீர்களுக்கு அருகில் சென்ற முத்தர் தண்ணீர் தெளித்துவிட்டு ஆறுமுகத்தாரை பார்த்தார். ஆறுமுகத்தார் ஒரு கூரான கொடுவாக்கத்தியினால் இளநீர்களை வரிசையாக வெட்டினார். இதனை ‘வழி வெட்டுதல்’ என்று கூறுவார்கள். வழி வெட்டிய பின்னர் முத்தர் வந்து தண்ணீர் தெளித்துவிட்டு பிள்ளையாரை விழுந்து வணங்க, மற்றவர்களும் வணங்கினார்கள்.

இளைஞர்கள் பொங்கல், வடை, வாழைப்பழங்கள், பலாப்பழ துண்டுகள் என்பவற்றை எல்லோருக்கும் தாராளமாக கொடுத்தார்கள். பிள்ளையார் கோவிலில் இருந்த பாத்திரங்களை பண்டமரவடிக்கு எடுத்து சென்றார்கள். ஒருவருக்கும் இரவு சாப்பாடு தேவைப்படவில்லை. எல்லோர் வீட்டு நாய்களும் பண்டமரத்தடியில் காவலிருந்தன. விசாலாட்சி மத்தியானம் சமைத்ததில் மீதமிருந்த சோறு,கறி யாவற்றையும் குழைத்து நாய்களுக்கு வைத்தாள். பாத்திரங்களை கழுவி வைத்த பெண்கள் கூத்து வெட்டையை நோக்கி சென்றனர். முத்தர், ஆறுமுகத்தார், அவர்கள் வயதை ஒத்த சில ஆண்கள் பண்டமரவடியில் காவல் இருந்தனர்.

மக்களை மகிழ்விக்க காளி கோவிலின் அருகே இருந்த கூத்து வெட்டையில் கணபதியின் தம்பி முறையான செல்லையர், அவனது மைத்துனர் முறையான வல்லிபுரம், பெரிய பரந்தன் இளைஞர்கள், செருக்கன் இளைஞர்கள் எல்லோரும் காத்தவராயன் கூத்து ஆடுவதற்காக தம்மை அலங்கரித்துக் கொண்டு இருந்தார்கள். செல்லையா சற்றே உயரம் குறைந்தவராக, காதில் ‘கடுக்கன்’ போட்டிருந்தார்.

நடுத்தர உயரமான வல்லிபுரம் குடுமி வைத்த தலையுடன் ‘கடுக்கனும்’ போட்டிருந்தார். ‘உடுக்கு’ அடிப்பதற்கு இரண்டு செருக்கன் இளைஞர்கள் ‘உடுக்குகளுடன்’ வந்திருந்தார்கள். பளையில் இருந்து வந்திருந்த அண்ணாவியார் பொங்கலுக்கு இடைஞ்சல் இல்லாமல் வேளைக்கு முடிக்க கூடியதாக காத்தவராயன் கூத்தை சுருக்கி, பகலில் ஒரு முறை ஆடப் பழக்கியிருந்தார்.

சாத்துப்படி சாத்துபவர் வேலைகளை முடித்திருந்தார். சிறுவர்கள் அவரின் வேலைகளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுருளுக்காக ஒரு வேட்டியை மேலே கட்டியிருந்த கட்டாடியார், வெள்ளிக்கிழமை வந்து மேற் பக்கம் முழுவதும், இரண்டு பக்கங்கள், பின்புறம் எல்லாம் வெள்ளை கட்ட வேண்டும்.

முத்தர் ஆறுமுகத்தாரிடம் “ஏன் இன்னும் பீப்பா  கட்டாடியார் வரவில்லை.” என்று கேட்டார். ஆறுமுகத்தாரும் “அவரது மகன் வந்து விட்டான், கட்டாடியாரும் பின்னால் வாறாராம்” என்றார். கட்டாடியாரை அவரின் வயிற்றின் மேல் இருக்கும் ‘வண்டி’ காரணமாக எல்லோரும் ‘பீப்பா கட்டாடியார்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு. அவர் தனது மகனை முதலிலேயே அனுப்பி விட்டார். மகனும் தென்னம் ஈக்குகளை சிறிதாக முறித்து, அவற்றின் இரு முனைகளையும் ஒரு வில்லுக்கத்தியால் சீவி கூராக்கி கொண்டிருந்தார். பீப்பா கட்டாடியார் வெள்ளை வேட்டி மூட்டை உடன், கள்ளு குடிக்க கள்ளு கொட்டிலுக்கு போயிருந்தார். அவருக்கு வெள்ளை கட்டாமல் காளி கோவிலில் பொங்கல் வேலை தொடங்காது என்று தெரியும்.

கட்டாடியாருக்கு வருடத்தில் இரு நாட்கள் தான் ஊரவர்கள் கூடுதலான மரியாதை கொடுத்தார்கள். ஒன்று காளி கோவில் பங்குனி பொங்கல். மற்றது கார்த்திகையில் வரும் மடை. இரண்டு பிளா கள்ளு குடித்ததும், இன்று பொங்கலில் தனக்கு உள்ள முக்கியத்துவத்தை பெரிய பரந்தன் மக்களுக்கு  புரிய வைக்க வேண்டும் என்று தீர்மானித்து, காலத்தை தாமதித்தார்.

சிறிது கால தாமதமாக சென்று தனது கடமையைச் செய்ய எண்ணியிருந்தார். அவர் தாமதிக்க தாமதிக்க கள்ளுகாரனும் பிளாவில் கள்ளை ஊற்றிக் கொண்டிருந்தார். பீப்பா கட்டாடியாருக்கு அவர் தீர்மானித்த அளவை விட வெறி கூடிவிட்டது. அவரால் எழும்பி நடக்க முடியவில்லை. ஆறுமுகத்தார் “பொன்னையா அண்ணை இன்னும் கட்டாடியாரை காணவில்லை. முத்தர் இரண்டு முறை கேட்டு விட்டார். நீங்கள் ஒருக்கால் போய் கூட்டி வாருங்கள்” என்று பொன்னையரை அனுப்பி வைத்தார்.

பொன்னையருக்கு கட்டாடியார் எங்கே இருப்பார் என்று தெரியும்.  நேரே கள்ளுக் கொட்டிலுக்கு போய் பார்த்து, கட்டாடியாரின் நிலையை புரிந்து கொண்டார். “கட்டாடியார் எழும்பும் நேரம் போட்டுது” என்று கூப்பிட்டு பார்த்தார். கட்டாடியார் எழும்புவார் போல் தெரியவில்லை. வேட்டி மூட்டையை தூக்கி ஒரு தோளில் போட்டுக் கொண்டு, மறு கையால் கட்டாடியாரை தூக்கி அணைத்து கோவில் வரை அழைத்து வந்தார்.

இப்போது கட்டாடியாருக்கு சற்று வெறி குறைந்து விட்டது. பொன்னையருக்கு தான் வேட்டி மூட்டையை தூக்கி கொண்டு கோவிலினுள்ளே செல்வதற்கு தயக்கமாக இருந்தது. கட்டாடியாரைப் பார்த்து “இந்தாரும் கட்டாடியார், இனி வேட்டி மூட்டையை தூக்கி வாரும்” என்றார். அப்போது பீப்பா கட்டாடியார் சற்று கோபமடைந்தவராக    “இஞ்சேரும் பொன்னையர், இவ்வளவு தூரம் தூக்கி வந்த உமக்கு கோவிலுக்குள்ளே கொண்டு போக பஞ்சியோ?” என்று கேட்டார்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னையபகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More