பனையும் தென்னையும் போரின் அவலங்களைச் சுமக்கும் தற்போதைய அடையாளங்கள்.
ஈழத்தில் அழிக்கப்பட்ட பனைகளின் எண்ணிக்கை 5,500,000 என்று தற்போது மதிப்பிடப் படுகிறது.
நான் பிறந்து, மண் அளைந்த கைதடி வடக்கில் ‘கொத்தாக் கூடல்’ என்னும் பெயரில் ஒரு பனங்கூடல் இருந்தது.அங்கு 1000 பனைகள்வரை நின்றன.அப்போது எனது மூதாதையரின் வீட்டுக்கு வழி சொல்ல, அது ஒரு அடையாளமாகப் பயன்பட்டது. அதிகாலைகளில் அங்கு சிரம பரிகாரம் செய்ய பனைகளின் மறைவில் குந்துபவர்கள் அநேகர். கைதடிச் சந்தியை தொட்டுச் செல்லும் யாழ்-கண்டி வீதிக்குச் செல்ல, வடக்குக் கைதடியிலிருந்து பனங்கூடலூடாக குறுக்கு வழியில், மிதிவண்டியிலும் நடந்தும் செல்வார்கள். அப்படி மிதிவண்டியில் செல்லும்போது பனங்காய் முதுகில் விழுந்து நோஎண்ணை போட்டுத் திரிந்த பலர் இப்பொழுது என் ஞாபகத்துக்கு வருகிறார்கள். இவ்வாறு என் இளமைக்கால வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த கொத்தாக் கூடலில் ஒரு பனை மரம்கூட இல்லாமல் இப்பொழுது அழிந்து போனது பெரும் சோகம். எல்லாப் பனைகளும் தறிக்கப் பட்டு காணி பிரிக்ப்பட்டு அங்கு வீடுகள் எழும்பியிருக்கின்றன.
சாதாரண பனைகள் 98 அடிகள் (30 மீட்டர்கள்) வரை வளரும். தமிழ்நாட்டின் காயல்குடி காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் குட்டைப் பனைகள் செழிப்பாக வளர்வதைக் கண்டிருக்கிறேன். இவை 15 அடி உயரத்துக்கு வளர்ந்து 8 வருடத்தில் 70-80 பனங்காய்கள் காய்க்கும் எனவும் கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழக பேராசிரியர் சொன்னார்.
சிறிய எண்ணிக்கையில் இந்த ரகம் இலங்கை புத்தளம் கற்பிட்டிப்ப பகுதியில் அறிமுகம் செய்யப் பட்டிருப்பதாக என் பால்ய நண்பன் பாலன் சொன்னான். இதை உறிதிப்படுத்த இலங்கை பனை ஆராச்சி நிலயத்தை தொடர்பு கொண்டும் சரியான தகவல்களை அறிய முடியவில்லை. அவரவர்களுக்கு அவரவர் பிராக்குகள் தான் பிரதானம் என்பதே இதற்கான சமாதானம்!
பனை ஏறுவது மிகவும் கஷ்டமான தொழில். நம்மூர்ப் பனை மரங்கள் நெடிதுயர்ந்து வளர்வன. இதிலேறி கள் இறக்காவிட்டால் பனை வருமானத்தின் பெரும் பங்கை நாம் இழந்து விடுவோம். ஆபிரிக்க குட்டைப் பனைமரங்களுடன் நம்மூர் பனைமரங்கள் சிலவற்றை கலந்தோ அல்லது நம்மூர் பனை மரங்களின் மரபணுக்களை மாற்றியோ இனவிருத்தி செய்ய விஞ்ஞானத்தில் வழிமுறைகள் உண்டு.
நிலத்தில் நின்று கொண்டே தேங்காய் பறிக்கக் கூடிய குள்ளமான தென்னைமரங்கள் தற்போது இனவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இப்போது கள்ளிறக்கும் கடினமான தொழிலைச்செய்ய இளைஞர்கள் முன்வருவதில்லை. எனவே, நின்றுகொண்டோ அல்லது சிறிய ஏணிவைத்தோ கள் இறக்கககூடிய குள்ளமான பனைகளை இனவிருத்தி செய்வது அவசியமாகிறது.
‘தென்னை பனை கமுகு ஆகியன ஒருவித்திலைத் தாவரங்கள். இதில் இனவிருத்தி செய்வதும் மரபணுக்களை மாற்றுவதும் கடினமானது. அது மட்டுமல்லாது நமக்கு வேண்டிய இயல்புடைய இறுதி தெரிவுக்கு காலமெடுக்குமல்லவா?’ என பேராசிரியர் கந்தையாவிடம் ஒருமுறை கேட்டேன்.
‘காலமெடுத்தாலும், அதை அப்படி விட்டுவிட முடியுமா…?
குள்ளமான தென்னை மரங்கள் இனவிருத்தி செய்யப்பட வில்லையா…? நெல்லு, கோதுமை. சோளம், பார்ளி, ஆகியனவும் ஒருவித்திலைத் தாவரங்கள்தான். அவற்றில் மரபணுக்கள் மாற்றப்படவில்லையா…? இதற்கு பணமும் அரச ஆதரவும்தான் தேவை. இலங்கை இந்தியாவிலுள்ள பனம்பொருள் ஆராய்ச்சி மையங்கள் தமக்கிடையேயுள்ள உள்ளுர் அரசியலை விடுத்து பனை அபிவிருத்தியில் கவனம் செலுத்தவேண்டும்…’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பேராசிரியர்.
எழுதியவர் – ஆசி கந்தராஜா