கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் நவுருத்தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இந்த அகதிகள் தாங்கள் விடுவிக்கப்படுவோம் என நம்பிக்கை கொண்டிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசின் முடிவு அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு தரப்பில் அந்த அகதிகளை நவுருத்தீவுக்கு திரும்பிச் செல்லுங்கள் அல்லது தடுப்பிலேயே இருங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஈராக்கிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் படகு வழியாக முஸ்தபா சலா அவரது தந்தையுடன் தஞ்சமடைந்த பொழுது அவருக்கு வயது 15. இன்று முஸ்தபாவின் வயது 23. கடந்த 8 ஆண்டுகளை நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவில் தடுப்பிலேயே முஸ்தபா கழித்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் முஸ்தபா ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, கூடிய விரைவில் ஒரு சுதந்திர மனிதனாக தான் வாழ்க்கையை ஆரம்பிக்க போவதாக முஸ்தபா எண்ணிக் கொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அரசு அதற்கு முட்டுக்கட்டை இட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தடுப்பில் 4 முதல் 5 வாரங்கள் வைத்து பின்னர் விடுவிப்போம் என ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால், முஸ்தபா மற்றும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்ட மேலும் 10 அகதிகள் விடுவிக்கப்படுவதற்கு பதிலாக கடந்த 4 மாதங்களாக சிட்னி வில்லாவுட் தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் இந்த அகதிகள் நிலை என்னவாகும் என்ற நிச்சயமற்ற நிலை நிலவுவதாக அகதிகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.