சிட்னி கடற்கரையில் யூதப் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி வலியுறுத்தியுள்ளார்.
யாரிடம் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்கப்பட வேண்டும், ஒருவரிடம் எத்தனை ஆயுதங்கள் இருக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் குறித்து நாடு முழுவதும் மீண்டும் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் தந்தை மற்றும் மகன் என்பதும், 50 வயதுடைய தந்தைக்கு ஆறு துப்பாக்கிகளுக்கான செல்லுபடியாகும் உரிமம் இருந்ததும் பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் அல்பனீசி, பொதுப் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஆயுத உரிமம் வழங்கும் முறைகளில் கடுமையான கண்காணிப்பும் தெளிவான வரம்புகளும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றார். யாருக்கு ஆயுதம் வைத்திருக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும், ஒருவரிடம் அனுமதிக்கப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கையையும் சட்டத்தின் மூலம் தெளிவாக நிர்ணயிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.