மூணாறு நிலச்சரிவு தொடர்பில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
ராஜமலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளதுடன், 15 பேரை காணவில்லை எனவும் மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணியும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் மீட்பு பணிகளில் 52 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள், பொலிஸார், வனத்துறையினர், சுகாதாரத்துறையினர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மூணாறுக்கு நேரில் செல்லவில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மூணாறு பகுதிக்கு செல்லவில்லை என முதல்வர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.