உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வரி விதிப்பு தொடர்பான சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒளிவுமறைவு அற்ற வரி விதிப்பும் நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவித்தலும் என்ற புதிய வரிசீர்திருத்த திட்டத்தை நிதி அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இதை காணொலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கும் பாதுகாப்பு அற்றவர்களுக்கு பாதுகாப்பையும் ஏழைகளுக்கு நிதியுதவியையும் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
எந்த சட்டமும் சிக்கலானதாக இருந்தால் அதை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்ற மோடி, இந்த புதிய வரிச்சட்டத்தால் வரி செலுத்துவோரும்இ நாடும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
வரிவிதிப்பு, வசூல், ரிபண்ட் என அனைத்தும் கணினி வாயிலாக நடக்கும் என தெரிவித்துள்ள அவர், வரி விதிப்பு முறை சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் வரி வசூல் குறித்த வழக்குகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடி வரை அதிகரித்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு நாட்டில் உள்ள அனைரும் வருமானவரி தாக்கல் செய்ய முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.