நாட்டிலுள்ளது ஹிந்தி அரசல்ல, இந்திய அரசு என்பதை எவரும் மறந்துவிட கூடாதென மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளி வகுப்பில் பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அதில் பேசியவர்கள் ஹிந்தியில் பேசியதால், அந்த காணொளி வகுப்பில் பங்குகொண்ட சிலர், ஹிந்தி தங்களுக்கு தெரியாது என்றும் எல்லாருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் பேசுமாறும் கேட்டதாகவும், அதற்கு ஹிந்தி தெரியாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் எனஅவர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணொளிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ருவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.
அதாவது, ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை. இது ஹிந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம் என அவர் பதிவேற்றியுள்ளார்.