சர்வதேச விமான போக்குவரத்திற்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிவரையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் நான்காம் கட்டமாக சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறித்த நான்காம் கட்ட தளர்வுகளில், மெட்ரோ ரயில் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் மத்திய அரசு அனுமதித்த வழித் தடங்களில் விமானங்கள் இயக்க தடை இல்லை எனவும் சிறப்பு விமானங்கள் வழமைப்போல் இயக்கப்படும் என்றும் சரக்கு போக்குவரத்து சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் “வந்தே பாரத்” திட்டத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்லும் சேவை தொடரும் எனவும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.