தமிழக சட்டசபை கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன.
சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர் 6 மாத இடைவெளியில் கூட்டப்பட வேண்டும். அதன்படி, வரும் செப்டம்பர் 23-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும்.
சென்னை கோட்டையில் உள்ள சட்டசபை மைய மண்டபத்திலும் சமூக இடைவெளியை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதனால் அங்கு அனைவருமே அமர இடமில்லாமல் போய்விடும்.
எனவே சட்டசபை கூட்டத்தொடரை வேறிடத்தில் நடத்தலாமா?. அதற்கு சென்னையில் எது உகந்த இடம்? என்பது பற்றி உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கடந்த 22-ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை கூட்டம் செப்டம்பர் 14-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்திற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.