வேலை கிடைத்தால் உயிரை தருவதாக கடவுளிடம் வேண்டி கொண்டதால், நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அடுத்த புத்தேரி ரயில்வே பாலம் அருகே நேற்று காலை இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் விசாரணையில், உயிரிழந்தவர் நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பத்தன்காடு பகுதியை சேர்ந்த நவீன் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் பொறியியல் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிவந்துள்ளார். இந்நிலையில் நவீனுக்கு மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக வேலை கிடைத்தது. இதனை தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று, அந்த வங்கியின் உதவி மேலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மும்பையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்த நவீன், புத்தேரி ரயில்வே பாலம் அருகே சென்று, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரின் சட்டைப்பையில் இருந்த கடிதம் ஒன்றை போலீசார் கண்டறிந்து படித்ததில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அக்கடிதத்தில், “நான் படித்து விட்டு பல நிறுவனங்களில் வேலை தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் வேலை கிடைத்தால், என் உயிரையே நேர்த்திக் கடனாக தருகிறேன் என கடவுளிடம் வேண்டியிருந்தேன். தற்போது எனக்கு வேலை கிடைத்துள்ளது, எனவே நான் வேண்டியபடி எனது உயிரை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இளைஞரின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலை கிடைத்ததற்காக கடவுளுக்கு தன் உயிரையே நேர்த்திக்கடன் அளிப்பதாக கடிதம் எழுதி விட்டு வங்கி உதவி மேலாளர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.