சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் புதன்கிழமை வந்த முதல்வர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்துப் போராடி வருகிறது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.
நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிந்துதான் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்தது. இதன்படி இந்த ஆண்டு 313 மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 841,251 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 படித்தனர். இதில் 41 சதவீதம் பேர், அதாவது 344,485 பேர் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள். ஆனால், இவர்களில் வெறும் 6 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். நானும் கிராமப்புற, அரசுப் பள்ளியில் படித்து வந்தவன்தான். எனவே தான் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தே உள்இடஒதுக்கீடு கொண்டு வந்தேன்.
உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் உண்மையாகவே பெருமை கொள்கிறோம். ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைத்ததும், அதுபற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துவோம். அரியர் மாணவர் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி விவாதிப்பது சரியாக இருக்காது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விடுதலையாவதால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வருவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டமியற்ற உள்ளது. இருப்பினும் அதை மத்திய அரசுதான் அமல்படுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது முறைகேடு புகார் எழுந்திருப்பதால் அதுபற்றி விசாரிக்க தனிநபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா என்பதை தற்போது சொல்ல முடியாது. வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் வருவாய்த் துறை அமைச்சரும், துறையின் செயலரும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார் அவர்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்எல்ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.