Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் தொடர்ந்து காகம், வாத்து அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு

இந்தியாவில் தொடர்ந்து காகம், வாத்து அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு

2 minutes read

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.

இதன்படி கடந்த 4 ஆம் திகதி ராஜஸ்தானில் 425 பறவைகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது.  அவற்றில் அதிகமாக காக்கைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் பறவைகள் இறப்பு பதிவாகி உள்ளது.

இதேபோன்று, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காகங்கள் இறந்துள்ளன.  இதேபோல பறவைகள் அதிகமாக வந்து செல்லும் இமாசல பிரதேசத்தில், இடப்பெயர்ச்சி செல்லும் பல பறவை இனங்கள் பறவை காய்ச்சலால் இறந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள காங்ரா மாவட்டத்தின் பாங் டேம் லேக் சரணாலய பகுதி சுற்றுவட்டாரத்தில் 1,800 பறவைகள் இறந்துள்ளன.

கேரளாவில் கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்து பண்ணையில் நோய் பரவியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கு 1,500 வாத்துகள் இறந்துள்ளன. இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் தாக்கி உள்ளது.

வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5.என்.8. வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு, கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு பறவை காய்ச்சல் பரவியுள்ளது.

கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9 ஆம் திகதி 200க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.

டெல்லியில் பல்வேறு பூங்காக்களிலும் காகங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  இவற்றில் மயூர் விகார் பகுதியில் உள்ள மத்திய பூங்காவில் 200 காகங்கள் இறந்துள்ளன.  அவற்றில் 5 காகங்களின் உடல்கள் அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்டன.  அவற்றை ஜலந்தர் நகரில் பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து பூங்காவில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன.  பார்வையாளர்களுக்கு தடை விதித்து, பூங்கா மூடப்பட்டது.

டெல்லியின் துவாரகா பகுதியில் டி.டி.ஏ. பூங்காவில் 2 காகங்களும், மேற்கு மாவட்டத்தில் ஹஸ்த்சால் கிராமத்தில் 16 காகங்களும் இறந்தன.  இதனால் பறவை காய்ச்சல் பரவி விட்டனவா? என அறிய அவற்றின் மாதிரிகளை டெல்லி அரசு அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

இதுபற்றி விரைவு பொறுப்பு குழு ஒன்றை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும்படி டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் நேற்றும் காகம் மற்றும் வாத்து ஆகிய பறவையினங்கள் உயிரிழந்து கிடந்துள்ளன.  இவற்றில் சரிதா விகார் பகுதியில் உள்ள மாவட்ட பூங்காவில் 24 காகங்கள் இறந்துள்ளன.  அவை மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

துவாரகா பகுதியில் 14 காகங்களும், ஹஸ்த்சால் பூங்காவில் 16 காகங்களும் இறந்து கிடந்துள்ளன.  டெல்லி வளர்ச்சி கழகத்தின் 15 பூங்காக்களில் நேற்று மொத்தம் 91 காகங்கள், 27 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் உத்தரவின்படி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  104 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பறவை காய்ச்சல் பற்றிய பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  டெல்லியின் பசுமை பகுதியான சஞ்சய் லேக் எச்சரிக்கை மண்டலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  

(தினத்தந்தி)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More