– பி.எஸ்.ஐ.கனி
மதுரை : கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை திருப்பாலை பள்ளியில் செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்திய பா.ஜ.க வினரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விசாரணை என்ற பெயரில் தலித் மற்றும் இஸ்லாமிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து துன்புறுத்துவதை கண்டித்தும், மதுரை கிரைம் பிராஞ்ச் அருகில் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை உலமா சபை, இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். திருப்பாலை பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் விஜயராஜன், மதிமுக வழக்கறிஞர் ஆசைத்தம்பி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் பாசறை துணைச்செயலாளர் மாலின், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநிலச் செயலாளர் பாத்திமா கனி, பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் காஜா மைதீன், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பேச்சாளர் தௌபிக் அலி, இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மதுரை மாவட்ட செயலாளர் பால்ராஜ், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் முஹம்மது அலி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட துணைத்தலைவர் இதயத்துல்லா, வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் பிரதிநிதி உஸ்மான், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகி இஸ்மாயில், மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தாஜுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் , அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன குரலெழுப்பினர். இறுதியாக ஒருங்கிணைந்த மக்கள் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பிலால்தீன் நன்றி கூறினார்.