சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சிக்கராயபுரத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் மேலும் கூறியுள்ளதாவது, “நாளைக்கே தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது.
சென்னை, ஆவடி, காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் உட்பட 37 தொகுதியை எனது பொறுப்பில் விஜயகாந்த் வழங்கி உள்ளார்.
தேர்தலில் கூட்டணி இருக்கா?, இல்லையா? என்பதை விஜயகாந்த் முடிவு எடுத்து அறிவிப்பார். தே.மு.தி.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தற்போது வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தே.மு.தி.க.தான். விஜயகாந்தான் தமிழகத்தில் பா.ஜ.க.சின்னத்தை கொண்டு சென்றவர்.
மேலும் விஜயகாந்தை காப்பதும் அவர் உருவாக்கிய கட்சியை சிறிதும் சரியாமல் காப்பதும் எனது கடமை. தேர்தல் இறுதிகட்டத்தில் அவர் பிரசாரத்துக்கு வர தயாராக உள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிக்கவேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. விஜயகாந்த் அனுமதி கொடுத்து, ஆண்டவன் அருள் இருந்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.
ஒரு பெண் என்ற முறையில் ஒரு பெண்ணாக சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவுக்காகவே வாழ்ந்தவர் சசிகலா. அவருக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது.
அவர் பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி வந்து, தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும். ஒரு பெண்ணாக அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு” என அவர் கூறியுள்ளார்.