போபால்: மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் சத்னா நோக்கிச் சென்ற பஸ்சில் 54 பயணிகள் இன்று பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ரேவா – சிதி எல்லைக்கு அருகிலுள்ள சுஹியாகட் அருகே இருந்த சாலையோர கால்வாயில் திடீெரன பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பன்சாகர் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் இந்த கால்வாயில் பஸ் கவிழ்ந்த விபத்தில், 42 பயணிகள் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் உயிருக்கு போராடிய சுமார் ஏழு பயணிகளை வெளியேற்றினர்.
மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள கிராமவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயற்சிக்கத் தொடங்கினர். கால்வாய் மிகவும் ஆழமானதாக இருந்ததால், பஸ் முழுவதும் கால்வாய் நீரில் மூழ்கி உள்ளது.
கிரேன் உதவியுடன் பேருந்தை வெளியேற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. பஸ் விபத்து தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாவட்ட ஆட்சியருடன் உரையாடினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.
மேலும் இந்த கோரா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளார். கால்வாயில் மூழ்கி 42 பேர் பலியான சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.