தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “2021 – 2022ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து 43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
நல் ஆளுமை குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்திலும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
தீயணைப்பு துறைக்கு 436 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நெடுஞ்சாலை துறைக்கு 18,750 கோடி ரூபாய், காவல் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 12000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். இதில் 2000 பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.