இந்தியாவில் கைது செய்யப்பட்ட இளம் பெண் சமூக ஆர்வலர் திஷா ரவி விடுதலையானார்.
இந்திய மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயதான கல்லூரி மாணவி, கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களை ஒரு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி, பெங்களூரு வந்த டெல்லி பொலிஸார், போராட்டங்கள் நடத்தும்போதும், அதில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்தும் வெளியிடப்படும் ஆவணமான ‘டூல் கிட்’ உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்குப் பகிர்ந்த குற்றத்துக்காக திஷா ரவியைக் கைதுசெய்தனர்.
இதனிடையே, திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் பிணை கோரி செவ்வாய்கிழமையன்று காலையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், திஷா ரவி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீது நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
பிணை வழக்கை விசாரித்த நீதிபதிகள் டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் திஷா ரவிக்கு பிணை வழங்கி உத்தரவிட்டனர்.
சிறை நடவடிக்கைகளுக்குப் பிறகு அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.