பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரி மற்றும் கோவை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானத்தின் மூலமாக முற்பகல் 11.15 மணிக்கு புதுச்சேரி செல்கிறார். அங்கு இடம்பெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இதனையடுத்து பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், தொடர்ந்து ஆய்வுக் கூடம், பயிற்சி மையத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட இரத்த வங்கி மையம், மகளிர் விடுதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.
அடுத்ததாக கோவையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க புதுவையில் இருந்து சென்னைக்கு வரும் அவர், 12 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கிறார்.
இந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதனைத் தொடர்ந்து நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள புதிய அணுமின் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்தும் பல்வேறு நலத்திட்டப் பணிகளில் பங்கேற்கும் அவர், பா.ஜ.க சார்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.
இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்ததும் கோவை விமானநிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.