அம்மா அரசு 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடனை இரத்து செய்து சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை 100 ஏரிகளுக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்த தெரிவித்த அவர், “நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக திட்டம் நிறைவேற்ற முடிவு செய்து அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டம் உரிய காலத்தில் முடிக்கப்பட்டிருக்கிறது. வேகமாகவும் விரைவாகவும் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தை பெரிய சவாலாக எடுத்து செய்து முடித்திருக்கிறோம்.
அம்மாவின் அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்தது. இது வரலாற்று சாதனையாகும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டிருக்கிறது .
தேர்தல் நேரத்தில் கோரிக்கைகள் வைப்பார்கள். பின்னர் திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் பொதுமக்கள் கோரிக்கை வைக்காமலேயே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.