பிரேசில் செயற்கை கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி.சி-51 ரொக்கெட் இன்று (சனிக்கிழமை) காலை விண்ணில் பாய்கிறது.
பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக பூமியைக் கண்காணிக்க அமேசானியா 1 செயற்கைக் கோளைத் தயாரித்துள்ளது. அமேசான் பிராந்தியத்தில் காடுகள் அழிப்பைக் கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.
இதனுடன் அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களும் இந்தியாவின் 5 செயற்கைக்கோள்களும் இன்று விண்ணில் செலுத்தப்படுகின்றன.
19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி- 51 ரொக்கெட், இன்று காலை 10 மணி 24 நிமிடங்களுக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணி நேரம் 30 நிமிட கவுண்ட் டவுன் நேற்று காலை தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ரொக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ரொக்கெட் இதுவாகும்.
மேலும் ரொக்கெட் ஏவும் காட்சிகளை இஸ்ரோ யூடியூப், ஃபேஸ்புக், ருவிட்டர் ஆகியவை மூலம் நேரலை செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.