தமிழகத்தில் தோ்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார்.
சசிகலாவின் கையெழுத்து மற்றும் திகதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் நேற்று (புதன்கிழமை) இரவு அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி அறிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், “மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க அவா் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் பொற்கால ஆட்சி தொடர வேண்டும்.
ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தோ்தலில் பணியாற்ற வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீய சக்தி என ஜெயலலிதா நமக்குக் காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரது தொண்டா்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டா்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது உளபூா்வமான நன்றிகள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எப்படி அவரின் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவா் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டா்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய என்றும் தெய்வமாக வணங்கும் ஜெயலலிதாவிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிராா்த்தனை செய்து கொண்டே இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் உடனிருந்து பல அரசியல் வெற்றிக் கூட்டணிகளை அதிமுகவுக்காக உருவாக்கிக் கொடுத்த சசிகலா அரசியல் களத்தில் இருந்து வெளியேறுகிறேன் என அறிவித்துள்ளமை தமிழக அரசியலில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.