கேரளாவிலிருந்து படகில் வெளிநாட்டுக்கு போகும் திட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் | கேரளாவின் பல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை
கேரள மாநிலத்தின் கடல் பகுதியின் வழியாக படகில் வெளிநாட்டுக்கு போகும் திட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்ததைத் தொடர்ந்து கேரளாவின் பல பகுதிகளில் அம்மாநில காவல்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
கொச்சி கடற்கரை பகுதியிலும் அதன் அருகாமைப் பகுதிகளிலும் இரவுப் பகலாக நடந்த இத்தேடுதல் நடவடிக்கையில் கடற்படை, கடலோரக் காவல்படை, கடல்சார் அமலாக்கப் பிரிவு உள்ளிட்டவை பங்கேற்றது என காவல்துறை தெரிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக, மத்திய உளவுத்துறை இலங்கையின் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவரின் கீழ் 45 இலங்கைத் தமிழர்கள் கேரளாவை வந்தடைந்துள்ளதாக கேரள காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து செராய், முன்னாபம், பள்ளிப்புரம், எடவனக்காடு உள்ளிட்ட கேரள கடலோரப் பகுதிகள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
“இலங்கையிலிருந்து யாரேனும் வந்துள்ளதாக அறிந்தால் காவல்துறைக்கு தெரியப்படுத்தும்படி ஹோட்டல், ரிசார்ட், தங்கும் விடுதிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது,” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில், கொச்சி கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் இருந்த படகை சோதனையிட்ட காவல்துறை, ஆவணங்கள் சரியாக சமர்பிக்கப்பட்டதை அடுத்து கேரள காவல்துறை படகினை விடுவித்திருக்கிறது.
படகு வழியாக வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கைத் தமிழர்களின் முயற்சியினைத் தடுக்க காசார்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான 18 கடலோர காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
கடந்த 2019ம் ஆண்டு தேவ மாதா என்ற படகு மூலம் கேரளாவின் முன்னாபம் பகுதியிலிருந்து நியூசிலாந்து நாட்டை நோக்கி 243 பேருடன் சென்ற படகு காணாமல் போனது. இதில் சென்றவர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள் எனக் கூறப்படும் நிலையில் அவர்கள் என்னவாகினர் என்பது இன்னும் கண்டறியப்படாமலே உள்ளது. இவ்வாறான சூழலில் கேரளாவிலிருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.