டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி கொள்முதல் செய்ய மத்திய எவ்வித ஆர்டரும் வழங்காதது அம்பலமாகியுள்ளது. மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்வதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு பல கட்டங்களாக கொள்முதல் செய்து நாடு முழுவதும் இலவசமாக விநியோகித்து வருகிறது. கடைசியாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு, தடுப்பூசி கொள்முதலுக்கான ஆர்ட்டர்களை வெளியிட்டது.
10 கோடி கோவிஷீட்டு தடுப்பூசிகளுக்காக சீரம் நிறுவனத்திடமும், 2 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திடமும் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த மருந்துகள் இன்னும் ஓரிரு நாட்களில் விநியோகிக்கப்பட உள்ள நிலையில், புதிய ஆர்ட்டர்கள் எதையும் மார்ச் மாதத்திற்கு பிறகு மத்திய அரசு இதுவரை தரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தடுப்பூசி மருந்தை மாநில அரசுகளே என்ற மத்திய அரசின் அனுமதியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தடுப்பூசி விற்பனை தொடர்பாக 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் தங்களை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கும் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், 4 மாநிலங்கள் தங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக கூறியிருக்கிறது.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் ஒரு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை 300 ரூபாய் வீதம் வாங்க ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. மராட்டிய மாநிலமும் முதல் கட்டமாக 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்குவதற்கு சீரம் நிறுவனத்திடம் ஆர்ட்டர்களை கொடுத்திருக்கிறது.
மாநில அரசுகள் தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு வசதியாக சீரம் நிறுவனம் தடுப்பூசி விலையை டோஸ் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைத்து 300 ரூபாய் என நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், மே 1ம் தேதி தொடங்கியுள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான 3ம் கட்ட தடுப்பூசி பணிகளை தொடங்க முடியாமல் அவை திணறி வருகின்றன.
தற்போது மத்திய அரசு தடுப்பூசி கொள்முதலை தாமதப்படுத்தி வருவதால் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக மாநில அரசுகள், சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களை நேரடியாக தொடர்புகொண்டு வருகின்றன.
மத்திய அரசு கொள்முதல் செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசி ஒன்றின் விலை 150 ரூபாயாக உள்ள நிலையில், மாநில அரசுகள் 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டியிருப்பதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது.