ஆட்டோ, டாக்ஸி ஓடும்
* 30% ஊழியர்களுடன் அரசு அலுவலகம் இயங்கும்
* 11 மாவட்டங்களுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள்
சென்னை: தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேருந்து போக்குவரத்து, டீக்கடை, சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை. தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு நாளை (7ம் தேதி) காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதையொட்டி முழு ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவிக்கலாமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சுகாதார துறை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பங்கேற்ற அதிகாரிகள், தமிழகத்தில் கொரோனா தொற்று குறையும் மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினர். இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு நாளை (7ம் தேதி) காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7ம் தேதி (நாளை) முதல் 14ம் தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். இந்த ஊரடங்கின்போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. எனவே, இந்த மாவட்டங்களில் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதேநேரத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படலாம். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.
* இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
* மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர இதர மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.
* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
* இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
* மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், டாக்சிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.
பொது
* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க, அந்த பகுதி மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்று பயணம் செய்யலாம்.
* கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும், 10 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
* தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* அனுமதி இல்லை
முழு ஊரடங்கின்போது அறிவிக்கப்பட்ட, பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. டீக்கடைகள், சலூன் கடைகள், ஜவுளி கடைகள், மால்கள் திறக்க அனுமதி இல்லை. அலுவலகம் செல்பவர்கள் வாகனங்களில் பயணம் செய்ய இ-பதிவு செய்வது உள்ளிட்ட நடைமுறைகள் தொடரும்.
அனுமதிக்கப்பட்ட கடைகள்
* மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள்.
* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள்.
* மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள்.
* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்.
* ஹார்டுவேர் கடைகள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்கும் கடைகள்.
* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
* கல்வி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்.