சென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக தொடர்ந்துள்ள வழக்கில் நீட்டை எதிர்க்கும் கட்சிகள் எதிர்மனுதாரர்களாக இணைந்து வழக்கை எதிர்கொள்வது என திராவிடர் கழகம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமூக நீதியாளர்களின் கலந்துரையாடல் என்ற பெயரில் நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், திராவிடர் இயக்க தமிழர் பேரவை, சமூக நீதி பேரவை உள்ளிட்ட 32 கட்சிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொண்டன. முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆய்வு குழுவுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சாதாரணமானவர்கள் கூட மருத்துவர்களாகி விடுவார்கள் என மக்களை பாஜக இழிவுபடுத்துவதாக தெரிவித்தார். இந்த வழக்கில் நீட் தேர்வை ஆதரிக்கும் அனைத்து கட்சிகளும் எதிர்மனுதாரர்களாக இணைந்து வாதங்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நீட் தேர்வு தொடர்பான பிரச்சனைக்கு திமுக தலைமையிலான அரசு நிச்சயம் நிரந்தர தீர்வு காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் நலனுக்காக சட்டப்போராட்டத்தையும் மக்கள் போராட்டத்தையும் தீவிரமாக முன்னெடுப்போம் என்றும் கி.வீரமணி கூறினார்.