நல்லூர் கந்தசுவாமி ஆலைய திருவிழா காலங்களில் இராணுவம் சப்பாத்துக்களுடனும் துப்பாகிகளுடனும் ஆலய வளாகத்தில் நுழைந்து தமிழர்களை சோதிக்கும் செயற்பாடுகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும். பிரதமரும் அரசாங்கமும் உடனடியாக இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார்.
அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலைய திருவிழா தமிழர்களின் அடையாள நிகழ்வாக கருதப்படுகின்றது. இந்த ஆலைய வரலாற்றில் இதுவரை ஆலையத்திற்குள் செல்பவர்களை பரிசோதனை செய்ததாக வரலாறுகள் இல்லை.
நல்லூர் கந்தசுவாமி ஆலையம் மிகவும் புனிதமான பகுதி. ஆனால் இன்று அங்கு சப்பாதுகளுடனும் துப்பாக்கிகளுடனும் உள்நுழைந்து தமிழ் மக்களை சோதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
சீருடை தரித்த இராணுவத்தினர் ஆக்கிரமிப்பையும் மக்களை அசௌகர்யத்திற்கு உள்ளாக்கும் நிலைமைகளை ஏற்றுகொள்ள முடியாததாகும்.
ஆலய நிருவாகமும் சரி, பொதுமக்களும் வேறு எவரும் இவ்வாறு பாதுகாப்பு கேட்கவில்லை. இன்று அரசாங்கமே தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்திவிட்டதாக கூறும் அரசாங்கம் வடக்கில் மட்டும் ஏன் இவ்வாறு கெடுபிடிகளை கையாள்கின்றது என்பது தெரியவில்லை.
யாழ்ப்பாணம் நல்லூர் ஒரு கலாசார புனித பூமி. அங்கு எமது கலாசாரத்தை நாசமாக்கும் வகையில் இராணுவம் நடந்துகொள்கின்ற என அவர் தெரிவித்தார்.
படங்கள் – வீரகேசரி