மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதை மாத்திரைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்தக் கலவரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும், சிஐடியினர் இதுவரையில் 56 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் மாத்திரைகள் அனைத்தும், விசேட நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவ்விடயம் தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கலவரத்தால் மஹர சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதம், பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 11 கைதிகள் மரணித்துள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.