இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது.
கல்கிசை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆணொருவரும் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும் ஒபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேநேரம், கடந்த 24 மணித்தியாலங்களில் 535 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 18 தொற்றாளர்கள் சிறைச்சாலை கொத்தணியுடனும் ஏனையோர் பேலியகொடை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 840 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 40 ஆயிரத்து 838 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, 6 ஆயிரத்து 539 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் 723 தொற்றாளர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.