நாளை மறுநாள் திங்கட்கிழமை தாயகம் தழுவிய பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள்மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் மற்றம் ஜெனிவா விடயங்களை கையாழ்வதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கான கூட்டத்தில் குறித்த தீர்மானம்நேற்று எடுக்கப்பட்டதாக அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் குறிப்பிட்டிருந்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழ வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்கான நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதாகவும், குறித்த கண்டனத்தை இணைந்து வெளிப்படுத்தம் வகையில் வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் கதவடைப்ப போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் அழைப்பதாக இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ளுமாறும் குறித்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தெளிவூட்டும் ஊடக சந்திப்பில் 7 கட்சிகள் மற்றும் சிவில் அமைப்பக்களும் இணைந்து குறித்த அழைப்பினை நேற்று விடுத்திருந்தனர். இதன்போது தமிழ்த் தெசியக்கூட்டமைப்பு சார்பில் எம் ஏ சுமந்திரன், த.தே.மக்கள் முன்னணி சார்பில் எஸ்.கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் விடுதலைக் சுட்டணி சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சி கழகம் சார்பில் அனந்தி சசிதரன் மற்றும் சிவில் அமைப்புக்கள், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பின் ஊடாக அழைப்பு விடுத்தனர்.
அதற்கு அமைவாக வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் வர்த்தக செயற்பாடுகளை நிறுத்தியும், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை பகிஸ்கரித்தும் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.