யாழில் மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலைமையில் யாழ் மாவட்டத்தில் 258 குடும்பங்களைச் சேர்ந்த 610 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதாரப் பகுதியினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முடிவடைந்துள்ளது. தொடர்ந்து ஏனைய பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்குரிய பூர்வாங்க வேலைத் திட்டங்கள் அனைத்தும் சுகாதார பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைத்தவுடன் மிக விரைவாக பொதுமக்களுக்கு செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மாவட்ட செயலகம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அதற்கு ஒத்தாசை வழங்கி வருகின்றார்கள். தற்பொழுது மாவட்டத்தில் இயல்பு நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பி உள்ளன. இருந்தபோதிலும் சுகாதார அமைச்சினுடைய அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுகாதார வழிமுறைகள் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியமாக இருக்கின்றது.
ஏனென்றால் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்ற இயல்புநிலை மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார். அந்த வகையிலே தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியான எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனைகளும் பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
குறிப்பாக வியாபாரிகள், சந்தைகள் மக்கள் கூடும் இடங்களில் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.
மேலும் கடந்தகால அவதானிப்புகளின் படி வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள் ஊடாக தொற்று இங்கே பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்களையும் பாதுகாத்து தங்களுடைய சமூகத்தையும் பாதுகாப்பதற்காக தாங்களாக முன்வந்து தங்களுடைய தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முன்னெடுத்தல் சிறந்தது.
மேலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கையை மனதில் இருத்தி பொதுமக்கள் தங்களுடைய அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்தல் மிகவும் அவசியமானதாகும் என்றார்.
அத்தோடு, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதன் மூலம் எமது மாவட்டத்தில் மேலும் கொரோனா கொத்தணி உருவாகாது தடுக்க முடியும். அத்தோடு பொதுமக்கள் மீண்டும் ஒரு முடக்கல் நிலைக்கு எமது மாவட்டத்தை இட்டு செல்லாது பாதுகாத்தல் அவசியம் எனவும் தெரிவித்தார்.