ஜெனிவா கூட்டத்தொடரின் அறிக்கையானது இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை வாழ் மக்களுக்கு நாட்டுக்குள் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் , அதற்கான தீர்வினை நாட்டில்தான் பெற்றுக் கொள்ளமுடியும். அதனைவிடுத்து சர்வதேச நாடுகளிடம் தீர்வுப் பெற்றுக் கொள்ள முயற்சித்தால் நாட்டு மக்கள் மத்தியில் மேலும் பிரிவினையே உருவாகும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நீதி அமைச்சில் நேற்று வியாழக்கிழை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது ,
ஜெனிவா கூட்டத்தொடரின் அறிக்கையானது ஒரு பக்கத்திற்கு சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவே நான் எண்ணுகின்றேன். இலங்கை இராணுவம் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவே யுத்தம் செய்திருந்தது. இந்நிலையில் அதனை மறந்து இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தும் வகையிலேயே இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாழ் மக்களாகிய நாம் எமக்கேதேனும் சிக்கல் நிலைமைகள் காணப்பட்டால், அதற்கான தீர்வினை நாட்டுக்குள்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து நாம் சர்வதேச நாடுகளிடம் தீர்வினை பெற்றுக் கொள்ள முயற்சித்தால் எம் மத்தியில் மேலும் இடைவெளியேற்படுவதை தவிர்க்க முடியாது.
இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாகளை தகனம் தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அது சுகாதார பிரிவினரால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இதுத் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் நான் விளக்கமளித்துள்ளேன். மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விஜயத்தின் போது இந்த ஜனாஸா விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றதா என்பது தொடர்பில் எனக்கு விளக்கமில்லை. ஆனால் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இதன்போது உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவந்த ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குவிசாரணைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பதை உயர்நீதி மன்றமே தீர்மானிக்கும். அதுத் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. இதேவேளை ஜனாதிபதி ஆணைக்குழு திட்டமிட்டே முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளதாக எரிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது . அவரது ஆட்சிகாலத்திலேயே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.