யாழாப்பாணத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை இராணுத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயற்படுகையில் அவர்கள் பயணித்த உழவு இயந்திர சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளானதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளார்.
சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கச்சாய் பகுதியில் கும்பல் ஒன்று மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து கொள்ளையர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
இதன்போது இராணுவத்தினரை அவதானித்த மணல் கொள்ளையர்கள் உழவு இயந்திரத்துடன் தப்பி செல்ல முற்பட்டனர்.
அதன்போதே உழவு இயந்திரத்தின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்கு உள்ளது.
இந் நிலையில் ஒருவர் இராணுவத்தினரிடம் சிக்கிக்கொள்ள ஏனையவர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
தம்மிடம் சிக்கிக்கொண்டவரை கைது செய்த இராணுவத்தினர் அவரை சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ,
இந் நிலையில் சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.