Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை – சிங்கப்பூர் 50 ஆண்டு இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் கூட்டு முத்திரை வெளியீடு

இலங்கை – சிங்கப்பூர் 50 ஆண்டு இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் கூட்டு முத்திரை வெளியீடு

2 minutes read

1970 ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கூட்டு முத்திரை வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்கிழமை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இணையவழி ரீதியாக இணைந்து கொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டதுடன், அவை கடல் சூழலைப் பாதுகாப்பதில் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பாக ‘கடல் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை சித்தரிக்கும் விதமாகவும், இலங்கையின் சதுப்புநிலங்கள் மற்றும் சிங்கப்பூரின் பவள சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சமூகம் மற்றும் சமூக மட்டங்களில் ஆழமாக வேரூன்றிய தொடர்புகளால் வளர்க்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை எடுத்துரைத்தார். இருவரும் வெவ்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த போது, உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை சமாளிப்பது தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ணனுடன் இடம்பெற்ற சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களை அவர் நினைவு கூர்ந்தார்.

இராஜதந்திர உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவுத் தபால் முத்திரைகளை வெளியிடுவதானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பெருமளவிலான அரவணைப்பையும் நட்பையும் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூர் – இலங்கை உறவுகளின் அன்பான மற்றும் நீண்டகால இயல்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணன் தனது கருத்துக்களில் குறிப்பிட்டார். தற்போதைய கொவிட்-19 காலகட்டம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் அர்த்தமுள்ள ஒத்துழைப்பு குறித்தும் அவர் கருத்துக்களை வெளியிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் ஷாங்க்ரி லாவில் நிகழ்வொன்று நடைபெற்றதுடன், அந்நிகழ்வில் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன மற்றும் சிங்கப்பூருக்கான வதியாத உயர் ஸ்தானிகர் சந்திரா தாஸ் ஆகியோர் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகமும், சஹாரா ஆபிரிக்கப் பணியகத்தின் பிரதி அதிகாரியுமான கில்பர்ட் ஓ முன்னிலையில் இரண்டு முத்திரைகளையும் வெளியிட்டனர்.

வெளியுறவு அமைச்சு, இன்போகொம் ஊடக அபிவிருத்தி அதிகாரசபை, சிங்போஸ்ட் மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் சிங்கப்பூரின் இன்போகொம் ஊடக அபிவிருத்தி அதிகாரசபையின் தபால் மற்றும் வாடிக்கையாளர் கொள்கையின் பிரதிப் பணிப்பாளர் ரூத் வோங் மற்றும் ஃபிலேட்லி அன்ட் ஸ்டேம்ப்ஸின் துணைத் தலைவர் பெக்கி டியோ ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More