பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வடைவதால், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் இலங்கையில் வாழ்வது பாதுகாப்பற்றது எனவும், சட்டரீதியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ அபிவிருத்தி அடைந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடவுச்சீட்டைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கடந்த 8ஆம் திகதி கல்பிட்டி கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த 19 பேரும் கல்பிட்டி நோக்கி பயணித்த வான் ஒன்றுடன் தொடர்புடைய சாரதி ஒருவரையும் அவரது நண்பரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஜுன் மாதம், கனடாவுக்கு கடற்பயணம் மேற்கொள்ளும் நோக்குடன், கர்நாடகா மாநிலம் மங்களூரில் தங்கியிருந்த நிலையில் இவ்வாறான குழு ஒன்றை இந்திய பொலிஸார் கைது செய்திருந்தனர்.