மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருப்பதால் ஜனவரி 27 வரை மின்வெட்டு விதிக்கப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் எரிபொருள் விநியோகம் கிடைப்பதை பொறுத்து நிலைமை மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மின் விநியோகத்தை துண்டிக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
அத்துடன் மின்விநியோகத்தை திட்டமிட்டு துண்டிக்கும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மின்சாரத் துண்டிப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலரை விநியோகிக்குமாறு ஜனாதிபதி மத்திய வங்கிக்கு ஆலோசனை இந்த சந்திப்பின்போது ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய 35000 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோல் மற்றும் 37,500 மெற்றிக்தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கு டொலர் செலுத்த மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை தடையில்லாமல் விநியோகிக்க வலுசக்தி அமைச்சும்,பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.