அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நிதியதிகாரம் இல்லை. பாராளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உண்டு. நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் கேட்டு சபைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடுவது பாராளுமன்றத்தை மலினப்படுத்துவதாகும். உண்மையை மறைக்க முயற்சிக்க வேண்டாம் என எதிர்த்தரப்பின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரை நோக்கி குறிப்பிட்டார்.
எதனையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. இணக்கப்பாட்டின் அம்சங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவேன். நிதியமைச்சர் என்ற ரீதியில் அறிக்கையை சமர்பிப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
பாராளுமன்ற அமர்வு நேற்று புதன்கிழமை கூடிய போது சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்ட இணக்கப்பாட்டு அம்சங்களை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
விசேட கூற்றை முன்வைத்த எதிர்தரப்பின் பிரமத கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல,
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகஸ்தர் மட்ட அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு,அரசியல் கட்சி தலைவர் கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை அந்த அறிக்கை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
அறிக்கை கைச்சாத்திடப்படவில்லை ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு மாத்திரம் எட்டப்பட்டுள்ளது என அரசாங்கம் குறிப்பிடுகிறது,அறிக்கையில் உணர்வு பூர்வமாக விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஆகவே அவற்றை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டுக்கொண்டு அரச அதிகாரிகள் உண்மையை மறைக்கிறார்கள். நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் கடந்த காலங்களில் பாராளுமன்றத்துக்கு உண்மை காரணிகள் அறிவிக்கப்படவில்லை. இதன் விளைவு இன்று பாரதூரமாகவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு அம்சங்களை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு நீங்கள் (சபாநாயகர்) ஜனாதிபதியிடம் குறிப்பிட்டீர்களா. பதிலளித்த இல்லை நான் ஜனாதிபதியை சந்திக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் சர்வக்கட்சி மாநாடு இடம்பெற்ற போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்போது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தினார்.
அதற்கு அப்போதைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்த போது தனக்கு சமர்ப்பிக்க வேண்டாம்,பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டார்.ஆனால் தற்போது அவர் அதனை மறந்து விட்டு செயற்படுகிறார்.
அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு,ஜனாதிபதிக்கு நிதி அதிகாரம் இல்லை.ஜனாதிபதியிடம் கேட்டு நாணய நிதியத்தின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடுவது பாராளுமன்றத்தை மலினப்படுத்துவதாகும்.ஜனாதிபதிக்கு நிதி வழங்குவதாயின் அதற்கு பாராளுமன்றமே அனுமதி வழங்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகயை எதிர்கொண்டுள்ளார்கள்,ஆகவே உண்மையை மறைக்க வேண்டாம் என சபாநாயகரிடம் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துரைத்த சபாநாயகர் உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீங்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.நிதியமைச்சர் என்ற ரீதியில் அறிக்கையை ஜனாதிபதியே சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.