நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிடெனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாலும், தனது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் வன்முறை வெடித்ததாலும் அதிபர் டிரம்ப் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வன்முறையால் அவருடைய பெயர், உலகளவில் நாசமாகி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவில், இதுபோன்ற வன்முறை நடைபெற்றதை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனால், இதற்கு மேலும் வீம்பு பிடிக்க விரும்பாத டிரம்ப், பிடெனின் பதவியேற்புக்கு வழி விட முடிவு செய்துள்ளார். பிடெனின் வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் அளித்த பேட்டியில், “உண்மையில் தேர்தலின் முடிவுகளுக்கு நான் உடன்படவில்லை. என்றாலும், 20ம் தேதி சமூகமாகன முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறும். ஆனால், சட்டப்பூர்வ வாக்குகள் மட்டுமே எண்ணப்படுவதை உறுதி செய்வதற்கான எனது போராட்டம் தொடரும்,” என்றார்.
‘மோடி வேதனை’
அமெரிக்க வன்முறை குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘வாஷிங்டன் கலவரம் தொடர்பான செய்திகள் கவலை அளிக்கிறது. ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் ஒப்படைக்கப்பட வேண்டும். சட்ட விரோத போராட்டங்களின் மூலம், ஜனநாயக மாண்புகள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது,’ என கூறியுள்ளார்.
‘அருமையான காட்சி: சீனர்கள் கிண்டல்’
டிரம்ப் ஆதரவாளர்கள் கட்டுப்பாட்டை மீறி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதை ‘என்னவொரு கண்கொள்ளா காட்சி‘ என்று சீனர்கள் இணையத்தில் கிண்டல் அடித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 2019 ஜூலையில் ஹாங்காங் போராட்டக் குழுவினர் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட போது, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, “பார்ப்பதற்கு என்னவொரு கண்கொள்ளா காட்சி” என்று விமர்சித்தார்.
இதனுடன் ஒப்பிட்டு, சீனர்கள் ஹாங்காங் போராட்டத்தினர் முற்றுகை படங்களை, அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதுடன் இணைத்து பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.
‘செனட்டிலும் பெரும்பான்மை’
ஜார்ஜியா மாகாணத்தில் காலியாக இருந்த 2 செனட் சபை உறுப்பினர்கள் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடத்தப்பட்டு, வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், செனட் சபையிலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்த டிரம்ப்புக்கு, இதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
‘போராட்டத்தில் பறந்த இந்திய கொடி’
நாடாளுமன்ற கட்டிடம் அருகே நடந்த போராட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பத்திரிகையாளர் அலெக்சாண்ட்ரோ அல்வரிஸ் வெளியிட்ட வீடியோவில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கிழக்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழையும் டிரம்ப் ஆதரவாளர்கள் குடியரசுக் கட்சி கொடி, அமெரிக்க தேசியக் கொடியுடன் வருகின்றனர். அவற்றுக்கு இடையே இந்திய தேசியக் கொடியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அசைப்பது, இ்ந்தியர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.