ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.
தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அரசு படையினருக்கு அமெரிக்க விமானப்படையினர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கபிசா மாகாணத்தில் உள்ள நிஜ்ரப் மாவட்டத்தில் இன்று காலை அமெரிக்க விமானப்படையினர் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான பி-52 ரக விமானம் மூலம் குண்டுகளை வீசி நடத்தப்பட்ட இந்த வான்வெளி தாக்குதலில் 11 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.