திருவனந்தபுரம்: பிரபல நடிகை சரிதாவுக்கும், மலையாள நடிகர் முகேஷுக்கும் கடந்த 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து கோரி நடிகர் முகேஷ், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல வருட விசாரணைக்குப் பின்னர் கடந்த 2 வருடங்களுக்கு முன் சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதையடுத்து நடிகர் முகேஷ் கடந்த வருடம் மேதிலா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்நிலையில் நடிகை சரிதா கடந்த சில மாதங்களுக்கு முன் கொச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது: சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தபோது நான் துபாயில் இருந்தேன்.
விசாரணைக்கு ஆஜராகக் கோரி அனுப்பப்பட்ட பல நோட்டீஸ்கள் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் என்னால் பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. இதன் காரணமாக நான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனக்கூறி சென்னை நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்கப்பட்டது. என தரப்பு வாதங்கள் எதையும் கேட்காமல் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. எனவே முகேஷின் 2வது திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் கவுன்சலிங்குக்காக 3ம் தேதி (நேற்று முன்தினம்) ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சரிதாவும், முகேஷும் கொச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதன் பிறகு வெளியே வந்த நடிகை சரிதா நீதிமன்ற வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட் டது.