‘நாய் சேகர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘சட்டம் என் கையில்’ என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
‘சிக்ஸர்’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் சாச்சி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘சட்டம் என் கையில்’. இதில் குணச்சித்திர நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் வித்யா பிரதீப், ரித்விகா, வெண்பா, நடிகர்கள் அஜய் ராஜ், பவல் நவகீதன், மைம் கோபி, அஜய் தேசாய், ராம்தாஸ், கஜராஜ், பவா செல்லத்துரை, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். சண்முகம் கிரியேஷன்ஸ், சீட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கிரிஷ் கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்யநாராயணன் ஆகிய மூவரும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.
ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் சதீஷின் இரத்தம் தோய்ந்த ஆக்ரோஷமான முகம் ரசிகர்களை கவர்ந்திருப்பதாலும், இவர் கதையின் நாயகனாக நடித்த ‘நாய் சேகர்’ வணிகரீதியாக வெற்றியை பெற்றதாலும், ‘சட்டம் என் கையில்’ என்ற பெயரில் ஏற்கனவே கமலஹாசன் நடிப்பில் 1978 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் வெற்றி பெற்றதாலும், சதீஷ் நடித்திருக்கும் ‘சட்டம் என் கையில்’ படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.