தேவையானவை:
சீரக சம்பா அரிசி -2 கப்,
வெங்காயம்- 1,
தக்காளி – 1,
இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
சிக்கன் – 500 கிராம்,
ஏலக்காய் -2,
கிராம்பு -2,
பட்டை -2.
அன்னாசி பூ-2,
பிரிஞ்சி இலை – 2,
சோம்பு -1 டீஸ்பூன்,
தயிர்-1/2 கப்,
தேங்காய்ப் பால்- 2 கப் (கெட்டி),
கொத்தமல்லித்தழை-1 கப்,
புதினா- 1 கப்,
எலுமிச்சைச் சாறு-2 டீஸ்பூன்.
செய்முறை:
அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். சிக்கனை தயிரில் உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும். அடிகனமான அகலமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை மற்றும் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தயிரில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் பாதியளவு மல்லி, புதினா இலை போட்டு சிறிது நேரம் வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு 1 கப் தண்ணீர் மற்றும் 2 கப் தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கொதிக்க ஆரம்பித்ததும் அரைமணி நேரம் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் போது எலுமிச்சைச் சாறு கலந்து மேலே மீதமுள்ள கொத்தமல்லி புதினா இலைகளை தூவி ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி தட்டை வைத்து மூடி குறைந்த தீயில் வேகவிடவும். பத்து நிமிடத்திற்கு பிறகு தோசை கல்லை சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கி இந்த பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும்.
பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரத்திலே திறந்து மெதுவாக கலந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். வெங்காய பச்சடி முட்டை மற்றும் சிக்கன் கிரேவி உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். குக்கர் என்றால் அனைத்தையும் வதக்கி அரிசி சேர்த்து மூடி வைத்து 1 விசில் வைத்தால் போதும்.
நன்றி – தினகரன்