பகல் தூக்கம் என்பது பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் பலருக்கும் இருக்கும் பழக்கமாகும். ஆனால், பகல் தூக்கம் தவறான பழக்கம் என்று அந்த வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவர்கள் பலரும் கூறும் தகவலாகும்.
இது குறித்து ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன் கூறுவது என்னவென்றால், பகல் தூக்கம் யாருக்கு நல்லது, யாருக்குக் கெடுதலைத் தரும் என்ற விபரங்களை ஆயுர்வேதம் விரிவாக எடுத்துக் கூறுகிறது.
உத்தராயணம் எனும் சூரியனின் வடக்கு நோக்கிய பாதையின் பயணத்தால் தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
மனிதர்களுக்கு குளிர்ச்சியான பொருட்களின் மீது ஏற்படும் மோகத்தாலும், காற்றில் ஈரப் பதம் குறைந்துள்ள வறட்சியான நிலையாலும், பகல் நீண்டு இரவின் நேரம் குறைவதாலும், உடலில் வாயுவின் சில குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி போன்றவை அதிகரிப்பதால் தன் இருப்பிடங்களாகிய பெருங்குடல், இடுப்பு, தொடை, செவி, எலும்பு, தோல் ஆகிய பகுதிகளில் சீற்றம் கொள்கிறது.
ஆனாலும் வெளிக்காற்றில் உள்ள சூட்டினால் அந்த வாயுவானது உடலில் மற்ற பகுதிளுக்குப் பரவுவதில்லை. அதனால் உடல் வலியை ஏற்படுத்தும் இந்த வாயுவின் சீற்றத்தை அடக்குவதில் பகல் தூக்கம் மிகவும் சிறந்தது. வீட்டில் கடுமையாக உழைக்கும் பெண்களைப் பொறுத்த வரை பகலில் தூங்குவது ஒரு சிறந்த வலி நிவாரணச் செயலாகவே அமைந்துள்ளது என்கிறார்.
எனவே, வீட்டில் அதிகாலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் கடுமையாக செய்யும் பெண்கள், பகலில் சிறிது நேரம் உறங்குவது நன்மையே தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.