அன்று கையில்
புத்தகமும் கையுமாய்
கல்வியும் கண்ணுமாய்
அன்னை தந்தை
ஆசிரியன் சொற்படிமாய்
தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள்
இன்று வாயில்
புகையும் தண்ணியுமாய்
கையில் கத்தியுமாய் வாளுமாய்
கொன்று திரிகிறார்கள்
அன்று ஒரு காலம் மேய்ப்பவன்
ஒருவன் இருந்தான்
ஏன் என்று கேட்க
அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது
அமைதி பேண தமிழருக்காய்
ஒரு படை இருந்தது
இன்று என்ன இருக்கின்றது
இன்று எவரும் இல்லாமல்
ஏன் என்று கேட்க
தானாய் தம்மையே
அழிக்கிறார்கள் தமிழர்
தெரிந்து கொள்ளுங்கள்
எம்மை ஆக்கிரமித்து
இருப்பவனுக்கும்
நாம் அழிவது தானே விருப்பம்
இனி என்ன தான்
மிஞ்சி இருக்கப் போகிறது
கஞ்சிக்கு கடைசியில்
என்ன செய்வீர்
கல்வியைத் தொலைத்து விட்டு
புலம் பெயர்ந்து இருக்கும்
உங்கள் அண்ணனும் அக்காவும்
மாமனும் மச்சானும்
இன்னும் எத்தனை காலம் தான்
காசு தருவான்
அவனுக்கும் நரை
விழுந்து விட்டது தலையில்
இனி இங்கு இருக்கும் எம்
இளசுகள் உங்களை நினைக்குமோ
நாம் அறியோம்
அவர்கள் பாதை புதியது
தெரிவுகளும் புதியது
எங்களையே இவர்கள் பழசுகள்
என்றழைக்கும் காலம் இப்போ
எங்கள் அடையாளமும்
காலமும் கலாச்சாரமும்
இங்கு மாறித்தான்
சுழர்கிறது
நினைவில் வையுங்கள்
கத்தியும் வாளும் கடைசியில்
உங்களையும் கொல்லும்
காலம் வரும்
தமிழராக தலை நிமிரும்
பாதையை தேடுங்கள்
கத்தியை தீட்டாதீர்கள்
புத்தியை தீட்டுங்கள்.
பா.உதயன்