Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் புலன்கள் ஒடுங்கிய கனம் | பிரியங்கன் பாக்கியரெத்தினம்

புலன்கள் ஒடுங்கிய கனம் | பிரியங்கன் பாக்கியரெத்தினம்

0 minutes read

எனக்கான எல்லாவற்றையும்
நீங்கள் அழித்துவிடுகிறீர்கள்
என் உரிமை என் சுதந்திரம்
எனது கருத்து என எல்லாவற்றையும்

உங்கள் பெருந்தேசிய வாதம்
என்னை ஏதுமில்லாமல் செய்துவிட
மல்லுக்கட்டிக்கொள்கிறது

திறந்திருக்கும் இரவின்
கொடிய வாசல்களின் ஊடாக
எனக்கானவற்றை எடுத்து செல்கிறீர்கள்

நான் என்ன செய்ய முடியும்
என்னிலிருந்து சிலர் உங்கள் ஏவல்களை
தலைகளால் நடந்து காவிச்செல்கிறார்கள்

உங்கள் நல்லிணக்க வலை
என்னையும் சேர்த்து மூடிக்கொள்கிறது
நான் குரல் தளர்ந்த ஒரு குழந்தையைப்போல
எனக்குள்ளாலே அழுதுகொள்கிறேன்

நீங்கள் கொல்லைகளால் எறிந்தவற்றை
பொறிக்கிக்கொண்ட என்னவர்கள்
எல்லாமும் கிடைத்துவிட்டதாய்
நன்றி விசுவாச பேச்சுகளால்
என் நிலத்தை உழுது திரிகிறார்கள்

புலன்கள் ஒடுங்கிய கனமொன்றில்
என் வார்த்தைகள் செத்துக்கொண்டிருந்தன
எனது விடுதலைக்கனவும் சுதந்திரமோகமும்
தாமாகவே அழிந்துபோக பழகிக்கொண்டன

ஒற்றுமை ஓரமாய் நின்று
என்னைச் சிரித்துக்கொண்டது
என்னில் மிஞ்சியிருந்த வார்த்தைகளை பார்த்து

பிரியங்கன் பாக்கியரெத்தினம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More