இருண்டு கிடக்கும் உலகம்
மெளனங்களோடு மட்டும்
பேசிக்கொண்டிருக்கிறது
அதன் அழகிய மொழிகளை
தொலைத்து விட்டு
ஒளிந்து கொள்ள இடம் தேடியபடி
மனிதன் அலைகிறான்
அவன் இசைத்த பாடல்களை எல்லாம்
திண்டு கொண்டிருக்கின்றன
கண்ணுக்கு தெரியாத வைரசுகள்
பறவைகள் பாடவில்லை
பூக்கள் பூக்கவில்லை
காலை ஒரு கணம் விடிய மறந்தது
காலம் தெரியாமலே
மரங்களில் இருந்து
ஒவ்வொரு இலையாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது
மனிதனின் அழகிய வாழ்வை
ஏதோவொன்று பறித்து செல்கிறது
ஊழிக்கூத்தின் உச்சத்தின் மத்தியிலும்
உலகம் தவம் இருக்கிறது
உயிர்ப் பிச்சை கேட்டபடி
இருந்தபோதிலும் அஞ்சற்க மனிதா
நீ தோற்று விழ விடமாட்டேனென
பூமியின் தோளில் வந்து அமர்ந்தபடி
பாடிக்கொண்டிருக்கிறது காடும் மலையும்
காற்றும் கடலும்.
பா.உதயன்
25/03/2020